தினமலர் 27.07.2012
பாளை.,யில் கூடுதல் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை
திருநெல்வேலி : பாளை.,பகுதியில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து இன்று (27ம் தேதி) நடக்கயிருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பாளை., மண்டலத்திற்குட்பட்ட 23வது வார்டு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தனியாக மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்க கோரி பாளை.,ஜவகர் மைதானத்தில் இன்று(27ம் தேதி) காலை உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதற்கிடையே மாநகராட்சி கமிஷனர் மோகன், மேயர் விஜிலா ஆகியோர் பாளை., மண்டலத்திற்குட்பட்ட 23வது வார்டின் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வினியோகிக்கவும், ஆய்வுகள் மேற்கொண்டு பாளை.,பகுதியில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைதொடர்ந்து 23வது வார்டு மக்கள் இன்று காலை மேற்கொள்ளயிருந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.
இது குறித்து கவுன்சிலர் உமாபதி சிவன் கூறியதாவது:
பாளை., மண்டலம் 23வது வார்டில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட கோரி பொதுமக்கள் இன்று(27ம் தேதி) பாளை.,யில் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர். இதற்கிடையே கமிஷனர், மேயர் 23வது வார்டு குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதோடு, தேவைப்படின் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
இதனையடுத்து இன்று(27ம் தேதி) காலை பாளை.,யில் நடைபெறயிருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று காலை 10.30 மணிக்கு பாளை., வீரபாண்டி மகாலில் 23வது வார்டு மக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.இவ்வாறு கவுன்சிலர் உமாபதிசிவன் தெரிவித்தார்.