Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கால அட்டவணைப்படி குடிநீர் வினியோகம்

Print PDF

தினமலர்                 01.07.2011

கால அட்டவணைப்படி குடிநீர் வினியோகம்

சேலம்: ""சேலம் மாநகராட்சியில், கால அட்டவணைப்படி குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை, அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில், சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில், குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை வழங்கி உரிய நடவடிக்கையை எடுக்க, மாவட்ட கலெக்டர் மகரபூணம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டிப்பு, மின் மோட்டார் பறிமுதல் ஆகிய நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். மாநகர பகுதியில், சீரான குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் நடராஜன், குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்று காலை 8 மணிக்கு, மாநகராட்சியின் நான்கு மண்டல அலவலகங்களிலும் பணியாற்றும், குழாய் பொருத்துநர்கள்(ஃபிட்டர்கள்), டேங்க் ஆப்ரேட்டர்கள், மண்டல உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோருக்கு, மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இருந்து திடீர் அழைப்பு விடுக்கப்பட்டது.

காலை, 8.30 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மைய அலுவலகத்தில் ஆஜராகினர். மாநகராட்சி கமிஷனர் நடராஜன் தலைமையில், ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடந்தது. கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிமுறைகள் குறித்து, விளக்கப்பட்டது.
கூட்டம் குறித்து மாநகராட்சி கமிஷனர் நடராஜன் கூறியதாவது:

சேலம் மாநகராட்சியில், ஒரு வாரமாக, கால அட்டவணைப்படி குடிநீர் வினியோகம் செய்வது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. எந்த வார்டில், எந்த தேதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது, என்ற விவரத்தை குழாய் பொருத்துநர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள், உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் முறையாக பதிவு செய்ய வேண்டும்.

குடிநீர் வினியோகம் செய்யும் போது, சம்மந்தப்பட்ட வார்டில் மண்டல அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் நேரடியாக சென்று குடிநீர் வினியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில், அலட்சியல் காட்டினால், சம்மந்தப்பட்டவர்கள் மீது, "சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

நிலத்தடி நீரை எடுத்து விற்க அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

Print PDF
தினமணி         04.02.2011

நிலத்தடி நீரை எடுத்து விற்க அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்


சென்னை, பிப்.3: நிலத்தடி நீரை எடுத்து விற்க எந்தவொரு நபரையும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 திருப்பூரைச் சேர்ந்த கே. பூமணி, கே. பரமசிவம் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றில் தண்ணீர் எடுத்து விற்க அரசு அதிகாரிகள் தடை விதிக்கின்றனர். அவர்களின் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 அந்த வழக்கில் புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சிக் கழகம் தன்னையும் ஒருவராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு செய்தது. அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அந்த இருவர் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்குச் சாதகமாக உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சிக் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இவற்றை நீதிபதிகள் எலீபே தர்மராவ், டி. அரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 அதில் கூறியிருப்பது: இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2003-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்னர், வேளாண்மைத் துறை, குறிப்பிட்ட விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், அந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர இன்னும் கூடுதல் காலம் தேவைப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 அந்தச் சட்டம் இயற்றப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் அதைச் செயல்பாட்டுக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான காரணங்கள் அரசுக்கு மட்டுமே தெரியும். மேலும், அந்தச் சட்டத்தை அறிவிப்பு செய்வது குறித்து இந்த உயர் நீதிமன்றம் கடந்த 28.7.09, 7.10.10 ஆகிய தேதிகளில் இரு உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. அப்போதும் நடவடிக்கைகள் இல்லை.

 வணிக நோக்கில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, அதன் மூலம் லாபம் அடைவோரிடம் இருந்து நிலத்தடி நீரைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. ஏனெனில், விவசாயத்துக்கு தண்ணீர்த் தட்டுப்பாடும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. எனவே, நிலத்தடி நீர்ச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரும் வரையில், நிலத்தடி நீரை எடுத்து விற்க எந்தவொரு நபரையும் அரசு அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.
 

பில்லூர் 2வது குடிநீர் திட்டம் பிப்.15 முதல் குடிநீர் சப்ளை : மாநகரில் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி

Print PDF

தினகரன்        03.02.2011

பில்லூர் 2வது குடிநீர் திட்டம் பிப்.15 முதல் குடிநீர் சப்ளை : மாநகரில் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி

கோவை, பிப். 3:

பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தின்கீழ் வரும் 15ம்தேதி முதல் குடிநீர் சப்ளை செய்யப்பட உள்ளது. இதன்மூலம், மாநகரில் குடிநீர் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

கோவை மாநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு சார்பில் ரூ.140 கோடி செலவில் பில்லூர் 2வது குடிநீர் திட்டப்பணிநடந்து வருகிறது. தற்போது, இப்பணி பெருமளவில் நிறைவுபெற்று விட்டது. இப்பணிகளை ஆய்வுசெய்வதற்காக தமிழக ஊரக தொழில் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட கலெக்டர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் பூபதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் மனோகரன், கண்காணிப்பு பொறியாளர் ராமசாமி, நிர்வாக பொறியாளர் கோபாலகிருஷ்ணன், குருசாமி ஆகியோர் நேற்று சென்றனர். காலை முதல் மாலை வரை ஆய்வு மேற்கொண்டனர். மாநகரில் இருந்து வெள்ளியங்காடு வரை சுமார் 60 கி.மீ. தூரம் சென்று ஆய்வுமேற்கொண்டனர். வெள்ளியங்காட்டில் தமிழ்நாடு குடிநீர் வாடிகால் வாரியம் சார்பில் தண்ணீர் சுத்தம் செய்யப்படும் பணிகளையும் ஆய்வுசெய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

பில்லூர் 2வது குடிநீர் திட்டப்பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. சிறு, சிறு பணிகள் மட்டும் பாக்கியுள்ளது. இப்பணிகளும் மிக விரைவில் முடிவடைந்து விடும். வரும் 15ம்தேதி முதல் இத்திட்டத்தின்கீழ் பில்லூர் அணையில் இருந்து தினமும் 40 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து மாநகராட்சி பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படும். இதன்மூலம், மாநகரில் குடிநீர் தேவை பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டு விடும். வரும் மார்ச் இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, முழு அளவில் தண்ணீர் எடுக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படும். அதன்பிறகு மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இவ்வாறு அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறினார்.
 


Page 119 of 390