தினமணி 01.12.2010
பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம்: 2011-ல் குடிநீர் விநியோகம்
கோவை, நவ.30: பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் 2010 மார்ச் மாதம் நிறைவடைந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி சாதாரணக் கூட்டம் மாநகராட்சி அரங்கில் மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்து பேசியது:
பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் 2011 மார்ச் மாதம் நிறைவடைந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத் திட்டம், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ்113.74 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கென சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை கீரணத்தம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைக்குகுறுக்கே திறந்த வெளியில் குழி தோண்டாமல் மண்ணை துளையிட்டு உந்துதல் முறையில் 1700 மி.மீ. விட்டம் கொண்ட இரும்பு மூடு குழாய்கள் பதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழாய்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கு மதிப்பீட்டு தொகைக்கு குறைவாக விண்ணப்பித்த ஒப்பந்தரார்களுக்கு அனுமதி வழங்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநகராட்சி பகுதி அபிவிருத்தி திட்டத்தின் காந்திநகர், அண்ணாநகர் உள்ளிட்டபகுதிகளில் தார்சாலைகள், கான்கிரீட் தளம் அமைத்தல், மேற்கு மண்டலத்தில் வணிக வளாகக் கடைகள், மேட்டுப்பாளையம் சாலை அண்ணா மார்க்கெட் கடைகள், மொத்த காய்கறி மார்க்கெட் கடைகள், கடைகளில் உரிமக் காலம் நீட்டிக்கப்பட்டு வாடகை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது.
அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேயரின் வார்டில் பூங்கா அபிவிருத்தி செய்ய பொது நிதியிலிருந்து பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சி கவுன்சிலர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். துணை மேயர் நா.காரத்திக், மண்டலத் தலைவர்கள் எஸ்.எம்.சாமி (கிழக்கு மண்டலம்), சி.பத்மநாபன் (வடக்கு), வி.பி.செல்வராஜ் (மேற்கு), ப.பைந்தமிழ் (தெற்கு), எதிர்கட்சித் தலைவர் வெ.ந.உதயக்குமார்,ஆளும்கட்சித்தலைவர் ஆர்.எஸ். திருமுகம், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.