Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வானிலை மாற்றத்தால் சிறுவாணி அணை நிரம்புமா? : குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தகவல்

Print PDF

தினமலர்                   09.11.2010

வானிலை மாற்றத்தால் சிறுவாணி அணை நிரம்புமா? : குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தகவல்

கோவை : தற்போது நிலவும் வானிலை சூழலுக்கு சிறுவாணி அணை நிரம்புவதற்கு வாய்ப்புகள் இல்லை. வேறு ஏதாவது புயல் மீண்டும் அடித்தால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு மழைபொழிந்தால் அணை நிரம்பும், என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறினார். கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி, பில்லூர் அணை ஆகியவை உள்ளன. கோவை மாநகராட்சியின் ஒரு பகுதி முழுமைக்கும் பில்லூர் அணையில் இருந்து வரும் குடிநீரும், மற்ற மூன்று பகுதி முழுமைக்கும் சிறுவாணி அணையில் இருந்து வரும் குடிநீரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. கேரள மாநில எல்லையில் அமைந்திருந்தாலும் தமிழகத்திற்கே சிறுவாணி அணையிலிருந்து வரும் குடிநீர் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு நாளைக்கு அணையிலிருந்து 100 மில்லியன் லிட்டர் சிறுவாணி நீர் எடுக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதிக்கு 75 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீரும், வழியோர கிராமங்களுக்கு 25 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீரும் அன்றாடம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழையை நம்பியே இந்த அணை உள்ளது. ஆண்டொன்றிற்கு இரு பருவ காலத்திலும் அணை நிறைந்துவிடும். அணையில் இருக்கும் தண்ணீரை கொண்டே ஆண்டுமுழுக்க தண்ணீர் சப்ளை செய்யப்படும்.
இந்த ஆண்டு தென்மேற்குப்பருவ மழை எதிர்பார்த்த பலனை கொடுக்காவிட்டாலும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து அணை நிரம்பி வழிந்தது. தற்போது துவங்கிய வடகிழக்கு பருவமழை காலத்திற்கும் எப்படியும் சிறுவாணி அணை நிரம்பிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அணை நிரம்பவில்லை. ஆண்டுதோறும் வழக்கமாக பெய்யும் பருவமழையில் தற்போது மாறுபாடு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை பெய்யும் காலம் சற்று தள்ளிப்போனது. வடகிழக்கு பருவமழை பெய்யவேண்டிய காலம் முன் கூட்டியே வந்து விட்டது. இதனால் அணையில் வழக்கமாக இருக்கும் தண்ணீரின் கொள்ளளவில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டது.

வழக்கமாக தென்மேற்குப் பருவமழையாக இருந்தாலும், வடகிழக்குப் பருவமழையாக இருந்தாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து அணை நிரம்பும் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேறும். ஆனால் இந்த பருவத்தில் எப்படியும் அணை நிறையும் என்று நினைத்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. அணைக்கு பாம்பாறு, பட்டியாறு, முத்தியாறு, சின்னாறுகளில் இருந்து வரும் தண்ணீர் வரத்து குறைந்தது.அணையின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 878.50 மீட்டர். நேற்று மாலை 4.00 மணி நேர நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 874.50 மீட்டராக இருந்தது. இனியும் நிரம்புவதற்கு 4 மீட்டர் தூரம் உள்ளது. ஆனால் அணையை அடுத்து அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பம்ப்புகள் நான்கும் தண்ணீரில் மூழ்கியே காணப்படுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப்பொறியாளர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. புயல் இனியும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும், எப்படியும் மழை பெய்யும் என்று நினைத்தோம். அது நடக்கவில்லை."ஜல்' புயலுக்கு மாற்றாக வேறு ஏதாவது புயல் வந்தால், வானிலையில் வேகமான மாற்றம் ஏற்படும். மழை தொடர்ந்து பெய்யும். சிறுவாணி அணை நிரம்புவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதை தவிர அணை நிரம்புவதற்கு வாய்ப்புகள் இல்லை. தற்போதுள்ள தண்ணீரை வைத்தே வரும் கோடையை சமாளிக்க வேண்டும், என்றார்.

 

மழைநீர் சேகரிக்க 158 இடங்களில் ஆழ்துளை : நிலத்தடி நீர்மட்டம் உயர்வு; "சிறுதுளி' பெருமிதம்

Print PDF

தினமலர்                  08.11.2010

மழைநீர் சேகரிக்க 158 இடங்களில் ஆழ்துளை : நிலத்தடி நீர்மட்டம் உயர்வு; "சிறுதுளி' பெருமிதம்

கோவை : கோவை நகரில் வீணாகும் மழைநீரை நிலத்தடியில் செலுத்த 158 இடங்களில் ஆழ்துளைகளை அமைத்து, மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தியது "சிறுதுளி' அமைப்பு. இதன்பயனாக, நகரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கோவையில் மழைநீர் சேகரிப்புக்கான விரிவான திட்டங்கள் ஏதும் அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களால் இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதனால், மழையின்போது சாலையில் வழிந்தோடும் நீர் சாக்கடையில் கலந்து குளம், குட்டைகளில் சங்கமித்து முக்கிய நீராதாரங்களை மாசுபடுத்தியது. அரசு அலுவலக கட்டடங்கள், குடியிருப்பு வளாகங்கள், சாலைகள், பொது இடங்களில் சேரும் மழைநீரை நிலத்துக்குள் செலுத்தினால் மட்டுமே, நிலத்தடி நீர் மட்டம் உயரும்; இதன்பயனாக, போர்வெல் மற்றும் விவசாய கிணறுகளிலும் நீர் ஊறும். இதற்கான திட்டங்களை அமல்படுத்த களத்தில் இறங்கிய "சிறுதுளி' சேவை அமைப்பு, மாநகரின் பல இடங்களிலும் ஆழ்துளையிட்டு மழைநீரை நிலத்தடியில் செலுத்தும் திட்டத்தை அமல் படுத்தியது. மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள் இருக்கும் பகுதிகளில் வழிந்தோடும் மழை நீரை நிலத்தடியில் செலுத்த ஆழ்துளையிட, மாநகராட்சி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தது.

மாநகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு மண்டலத்துக்கும் உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி கட்டடங்கள் இருக்கும் பகுதிகளை தேர்வு செய்தது. வடக்கு மண்டலத்தில் 37 இடங்களிலும், தெற்கு மண்டலத்தில் 38 இடத்திலும், கிழக்கு மண்டலத்தில் 37 இடத்திலும், மேற்கு மண்டலத்தில் 38 இடத்திலும் நிலத்தில் ஆழ்துளை அமைத்து, மழைநீரை உட்செலுத்தி வருகிறது. இத்திட்டத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் 50 லட்சம் ரூபாயை ஒதுக்கியது; பணிகளை சிறுதுளி அமைப்பு மேற்கொண்டது. இதையடுத்து, மத்திய நீர்வள அமைச்சக இணைச்செயலர் ராம்மோகன் மிஸ்ரா, மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, கலெக்டர் உமாநாத் ஆகியோரை கொண்ட குழு கோவையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான ஆய்வு மேற்கொண்டது.

கோவையிலுள்ள அரசு அலுவலகங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றின் வளாகங்களில் மழைநீர் சேகரிப்புக்கான ஆழ்துளைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மாவட்ட அளவில் தொழில்நுட்ப கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் தலைவராக கலெக்டர், உறுப்பினர்களாக மாநகராட்சி கமிஷனர், பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இக்குழுவினர், கோவையில் மழைநீர் வடிகால் அமைக்கவேண்டிய இடங்களை தேர்வு செய்து மாநில கமிட்டி வாயிலாக மத்திய அரசுக்கு அனுப்பியது. அதன்பயனாக, மத்திய நீர்வள அமைச்சகம் முதற்கட்டமாக 70 லட்சம் ரூபாயை "சிறுதுளி' அமைப்புக்கு வழங்கியது.

இந்நிதியில் கோவையிலுள்ள அரசு அலுவலகங்கள், அரசு கட்டட பகுதிகள், அரசு அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகள் உள்பட 158 இடங்களில் மழைநீர் வடிகாலுக்கான ஆழ்துளைகள்அமைக்கப் பட்டன. கடந்த இரண்டு வாரமாக பெய்த தொடர் மழையின் போது வெள்ளம் வழிந்தோடி ஆழ்துளைகளின் வழியே நிலத்தடியில் சேர்ந்தன. இதன்பயனாக, கோவை நகரின் சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக "சிறுதுளி' தெரிவித்துள்ளது. "சிறுதுளி' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் கூறுகையில், ""சிறுதுளி சார்பில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகாலுக்கென்று ஆழ்துளை அமைத்துள்ளோம். ""இதன்வழியே மழைநீர் எளிதாக நிலத்துக்குள் சென்றுள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக உயர்ந்துள்ளது. இதே போன்று, அரசு மற்றும் தனியார் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டால், நிலத்தடி நீர் மட்டம் இன்னும் வேகமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை,'' என்றார்.

 

விரயமாகும் நீரை சேமித்தால் பயன் தானே...! கோத்தகிரி நகர மக்களின் எதிர்பார்ப்பு இது தான்...

Print PDF

தினமலர்                      08.11.2010

விரயமாகும் நீரை சேமித்தால் பயன் தானே...! கோத்தகிரி நகர மக்களின் எதிர்பார்ப்பு இது தான்...

கோத்தகிரி : கோத்தகிரி நகரப் பகுதி மக்களின் நீர் வினியோகத்துக்கு பயன்படும் ஈளாடா தடுப்பணையை தூர் வாரினால், விரயமாகும் நீரை சேமிக்க முடியும்.

கோத்தகிரி நகரப் பகுதியில் வசிக்கும் மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய, 1972ம் ஆண்டு கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், எல்..சி., மூலம் 20 லட்சம் கடன் பெற்று, ஈளாடா தடுப்பணை உருவாக்கப்பட்டது. சீரான வினியோகத்துக்காக, தடுப்பணையில் இருந்து வரும் நீரை, கேர்பெட்டா புதூர் பகுதியில் உள்ள "பம்ப்' அறையில் சுத்திகரித்து, சக்திமலை பகுதியில் "மெகா' நீர் தேக்கத் தொட்டியில் சேமித்து வினியோகிக்கப்படுகிறது.

நாளடைவில் அதிகரித்த மக்கள் தொகை மற்றும் வணிக நிறுவனங்களால், நீர் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டது. அதே நேரத்தில், தடுப்பணையில் இருந்து விரயமாகும் நீரை சேமிக்க, போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், 1.50 கோடி மதிப்பில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம், "மாற்று குடிநீர் திட்டம்' செயல்படுத்தப்பட்டது; தடுப்பணையில் இருந்து "மெகா' குழாய்கள் இணைக்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட போது, போதிய பயன் தரவில்லை. திட்டமிடாதப் பணிகளால், அரசின் நிதி விரயமாகியுள்ளது என, பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது ஒருபுறம் இருக்க, கோத்தகிரி நகரப் பகுதியில் நிலவும் நீர் பற்றாக்குறையை சமாளிக்க, அளக்கரை குடிநீர் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பேரூராட்சி மன்றக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், திட்டத்தை செயல்படுத்த செலவாகும் 4 கோடி ரூபாயில், ஒரு பங்குத் தொகையை பேரூராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டும் என, குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.

பேரூராட்சியில் நிலவும் நிதிப் பற்றாக்குறையால், திட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க, அளக்கரை குடிநீர் திட்டத்தை நடப்பாண்டு செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, சமீபத்தில் நீலகிரிக்கு வருகை தந்த துணை முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.தேவையான நிதி வழங்குவதாக, துணை முதல்வர் உறுதியளித்துள்ளதை அடுத்து, மதிப்பீடு மேற்கொள்ள கணிசமான நிதியும் ஒதுக்கப்பட்டது.

திட்டம் செயல்படும் பட்சத்தில், கோத்தகிரி நகரப் பகுதி மக்களுக்கு தடையின்றி நீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஈளாடா தடுப்பணையை தூர்வாரி, விரயமாகும் நீரை சேமித்து, வறட்சி நாட்களில் தடையின்றி வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 


Page 141 of 390