தினமலர் 04.11.2010
ஓசூரில் நவ.,13ல் குடிநீர் திட்ட 3ம் கட்ட பணி துவக்கம்: துணை முதல்வர் வருகை
ஓசூர்: ஓசூரில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூன்றாம் கட்ட பணிகள் வரும் 13ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் 1,928 கோடி ரூபாயில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் துவங்கப்பட்டு ஐந்து தொகுப்பாக பணிகள் நடந்து வருகிறது. முதல் தொகுப்பில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க ஒனேக்கல்லில் இறைப்பான் கிணறு, குழாய் பதிக்கும் பணிகளும், பென்னாகரம் அருகே மடத்தில் நான்கு ஏக்கரில் 240 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சமநிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடக்கிறது.
இரண்டாம் கட்டமாக தர்மபுரி அம்பேத்கர் நகர், சவுளூரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் நீர் சுத்திரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 நகராட்சியில், 13 டவுன் பஞ்சாயத்துகள், 17 பஞ்சாயத்து யூனியன்களை சேர்ந்த 30 லட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 70 லிட்டர் வீதம் தண்ணீர் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.மூன்றாம் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கெலமங்கலம், தளி, சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி பஞ்சாயத்து யூனியன்களை சேர்ந்த கிராமங்கள் பயன்பெறும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பில் ஒனேக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 13ம் தேதி ஓசூர் வருகிறார். அன்று ஓசூர் அடுத்த தின்னூரில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, குழாய் பதிக்கும் பணிகளை துவக்கி வைக்கிறார். அரசு விழா முடித்த பின் மாலையில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்திலும், இரவு ஓசூரில் தி.மு.க., சாதனை விளக்கதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.