Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு சாதனம்

Print PDF

தினமணி                      01.11.2010

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு சாதனம்

மதுரை, அக்.31: மதுரை மாநகராட்சி மற்றும் யூனியன் வங்கி இணைந்து, மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியருக்குக் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் வழங்கும் விழா இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின், குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை இயக்கிவைத்துப் பேசுகையில், மதுரை மாநகராட்சியும், யூனியன் வங்கியும் ஒருங்கிணைந்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கு 14 ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகிரப்பு சாதனம் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, தல்லாகுளம் மேல்நிலைப் பள்ளி, .வெ.ரா. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சுந்தராஜபுரம் பள்ளி ஆகியவற்றில் இச்சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளது. தற்போது இளங்கோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மதுரை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93 சதவீதமாகும். வரும் ஆண்டுகளில் 100 சதம் தேர்ச்சி பெறவும், மாநில அளவில் முதலிடம் பிடிக்கவும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், யூனியன் வங்கி மேலாளர் முரளி, மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

தினமும் குடிநீர் வினியோகம் திட்டம்:உள்ளாட்சி தினத்தில் மக்களுக்கு அர்ப்பணிப்பு சூப்பர்

Print PDF

தினமலர்          01.11.2010

தினமும்  குடிநீர் வினியோகம் திட்டம்:உள்ளாட்சி தினத்தில் மக்களுக்கு அர்ப்பணிப்பு சூப்பர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், இன்று முதல் தினமும் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்கிறது. பொள்ளாச்சி நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக கடந்த 1948ல் முதல் குடிநீர் திட்டம் துவங்கப் பட்டது. அதன்பின் நகராட்சியில் குடியிருப்புகளின் எண்ணிக்கையும், மக்கள் தொகையும் அதிகரித்ததால் இரண்டாம் மற்றும் மூன்றாவது குடிநீர் திட்டம் கொண்டு வரப் பட்டது. ஆழியாறு ஆற்றில் அம்பராம்பாளையம் நீரேற்று நிலையத்தில் இருந்து கொண்டு வரப்படும் சுத்தகரிக்கப்பட்ட தண்ணீர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் பகிர்ந்து வினியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு நீங்காததால், குடிநீர் மேம்பாட்டு திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்தது. புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்காக நகராட்சி நிர்வாகம் 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தில் சோமசுந்தராபுரம் லே-அவுட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டு மேல்நிலை தொட்டியும், வி.கே.வி., லே-அவுட்டில் ஐந்து லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும், கே.ஆர்.ஜி., நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும் கட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே குடிநீர் திட்ட மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகளுடன், புதிய மேல்நிலைத்தொட்டிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் தினமும் 140 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் வினியோகம் செய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது. குடிநீர் திட்டத்தின் அனைத்து மேம்பாட்டு பணிகளும் நிறைவடைந்துள்ளதால், நகராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கு தினமும் குடிநீர் வழங்கும் முறை பரிச்சார்த்த முறையில் அமல்படுத்தப்பட்டது. குடிநீர் திட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால், இன்று (1ம் தேதி) முதல் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கான பணிகளை நகராட்சி கமிஷனர் பூங்கொடி அருமைக்கண், பொறியாளர் மோகன் ஆகியோர் செய்து வருகின்றனர். நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி கூறியதாவது:

பொள்ளாச்சி நகராட்சியில் தற்போது ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிநீர் திட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால் இன்று முதல் தினமும் ஒன்னரை மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியில் 12,130 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 280 பொதுக்குடிநீர் குழாய்களும் உள்ளன. புதிய குடிநீர் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். இன்னும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. அதனால், புதிதாக வீட்டு குடிநீர் இணைப்பு வேண்டுவோர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்திலேயே பொள்ளாச்சி நகராட்சியில் மட்டுமே தினமும் சுத்திகரிக்கப்பட்ட நீர் வினியோகம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். நவீன தொழில்நுட்பம்:

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பொள்ளாச்சி நகராட்சியில் குடிநீர் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. குடிநீர் கசிவு ஏற்படுவது கண்டுபிடிக்கபடாததால் பெரிய உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்தது. தற்போது, குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகளை கண்டறிய, 12 லட்சம் ரூபாய் செலவில் நடமாடும் குடிநீர் கசிவு கண்டறியும் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட இந்த வாகனம் பொள் ளாச்சி உள்பட ஏழு இடங்களில் மட்டுமே உள்ளது. குடிநீர் குழாயில் ஏற்படும் கசிவுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதன்மூலம் குடிநீர் குழாயில் கசிவு ஏற் பட்டால் உடனுக்குடன் சீரமைத்து வினியோகம் சீராக்கப்படும்' என்றனர்.

 

பில்லூர் 2வது குடிநீர் திட்ட பணிகளில் அலட்சியம்:பாழாகின்றன, ரூ.பல லட்சம் சாதனங்கள்!

Print PDF

தினமலர்               01.11.2010

பில்லூர் 2வது குடிநீர் திட்ட பணிகளில் அலட்சியம்:பாழாகின்றன, ரூ.பல லட்சம் சாதனங்கள்!

பில்லூர் 2வது குடிநீர் திட்டப்பணிகளுக்காக பல லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட சாதனங்கள், உரிய பாதுகாப்பு வசதிகளின்றி மழை நீரில் நனைந்து நாசமாகி வருகின்றன. கோவை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 140 கோடி ரூபாயில், "பில்லூர் 2வது குடிநீர் திட்டம்' தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வரும் 2011 மே மாதத்துக்குள் மக்களுக்கு குடிநீர் சப்ளையை துவக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், அதிகாரிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றுகின்றனர். பில்லூர் அணையில் எடுக்கப்படும் (பம்ப்) 125 எம்.எல்.டி., தண்ணீர், சுரங்கம் வழியாக வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது. சேறு, சகதி கலந்து வரும் நீரை சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அதிநவீன எலக்ட்ரானிக் இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கப்பு செய்யப்படவுள்ளது. அதன்பின், சுத்தம் செய்த தண்ணீர் எலக்ட்ரானிக் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் மோட்டார் மூலம் கோவை மாநகருக்கு குழாய் வழியாக பம்பிங் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு தேவையான 370 கிலோவாட் பவர் கொண்ட 6 மின்மோட்டார்கள், பம்ப்செட் வால்வுகள், வடிகட்டும் சாதனங்கள், தொட்டிகளுக்கு உண்டான உபகரணங்கள், வடிகட்டும் தொட்டிகளுக்கு தேவையான வால்வுகள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கோவைக்கு பம்பிங் செய்யும் எலக்ட்ரானிக் டிரான்ஸ் பார்மர்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை, எவ்விதமான பாதுகாப்பு வசதியும் செய்யாமல் பில்லூரில் திறந்த வெளியில்போட்டு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து சாதனங்களும் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் கொஞ்சம், கொஞ்சமாக நாசமடைந்து வருகின்றன. இதை பாதுகாக்க வேண்டிய ஒப்பந்ததாரர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோர் அலட்சியமாக உள்ளனர். இது குறித்து மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது:

சுத்திகரிப்பு நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின், எலக்ட்ரானிக் டிரான்ஸ்பார்மர்களின் உதவியுடன்தான் நீரை குழாயில் பம்பிங் செய்ய முடியும். எனவே, எலக்ட்ரானிக் டிரான்ஸ்பார்மர்கள், சர்க்யூட்கள், பேனல் போர்டுகளை நீரில் நனைந்துவிடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதில் தண்ணீர் பட்டால் துரு பிடித்து நாசமாகிவிடும். தற்போது இக்குடிநீர் திட்டத்துக்கு வாங்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் சாதனங்கள் பாதுகாப்பு இல்லாமல் வெட்டவெளியில் போடப்பட்டு மழையில் நனைந்து வருகின்றன. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் பழுதாகி, இயங்காத நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அப்படியே துவக்கத்தில் இயங்கினாலும், அடிக்கடி பழுதாகிவிடும். எனவே, எலக்ட்ரானிக் சாதனங்கள், மின் மோட்டார்களுக்கு ஷெட் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. இவ்வாறு, மின்வாரிய
அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Last Updated on Monday, 01 November 2010 07:38
 


Page 146 of 390