Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ரூ. 169 கோடி குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதி செப்டம்பரில் செயல்படும்'

Print PDF

தினமணி 27.07.2010

ரூ. 169 கோடி குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதி செப்டம்பரில் செயல்படும்'

திருச்சி, ஜூலை 26: திருச்சி மாநகரில் நடைபெற்று வரும் ரூ. 169 கோடி குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி, வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றார் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு. தமிழக முதல்வர் இதைத் தொடக்கிவைப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

திருச்சி மாநகரில் அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், ரூ. 169 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நிதி நிறுவனத்தின் நிதி உதவியில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் 8 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத் திட்டத்தில் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மூன்று இடங்களில் பிரதான நீர் சேகரிக்கும் கிணறுகள், 2 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், 35 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 88.59 கிமீ தொலைவுக்கு பிரதான மற்றும் கிளை குடிநீர் உந்து குழாய்கள், 262.08 கிமீ தொலைவுக்கு குடிநீர் விநியோகக் குழாய் மற்றும் ஏற்கெனவே பதிக்கப்பட்டு பழுதடைந்துள்ள 446 கிமீ தொலைவுக்கான குழாயை மாற்றியமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளில் கொள்ளிடத்தில் 3-ம் கிணறு பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துள்ளது. இந்தக் கிணற்றை திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு. பின்னர் அவர் கூறியது:

அடுத்த 40 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவையின் அடிப்படையில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பணி முடிவடைந்துள்ள கொள்ளிடம் கிணறு எண்: 3-ல் இருந்து 5 கிமீ தொலைவுக்கு காவிரியாற்றின் வடகரை வரை பிரதான குடிநீரேற்றும் குழாயும் பதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தக் குழாயை காவிரியாற்றின் வடகரையிலிருந்து பொன்மலைக் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர் சேகரிக்கும் கிணறு வரை காவிரியாற்றின் குறுக்கே அரை கிலோமீட்டர் தொலைவுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் குழாய் பதித்து இணைக்கும் பணியும் நடைபெறுகிறது.

இதையடுத்து, பொன்மலைக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் உள்ளடக்கிய கிராப்பட்டி, அன்புநகர், கல்லுக்குழி, காஜாமலை காமராஜ் நகர், அம்மன் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தரராஜ் நகர், அரியமங்கலம் மலையப்ப நகர், ரயில்நகர், ஜெகநாதபுரம், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேலக்கல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, சங்கிலியாண்டபுரம், விவேகானந்தாநகர் ஆகிய பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்க முடியும்.

இந்த ஒரு பகுதி பணிகளை செப்டம்பர் முதல் வாரத்தில் முதல்வர் கருணாநிதி திருச்சி வரும்போது தொடக்கிவைப்பார் என்றார் நேரு.

ஆய்வின்போது, மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, நிர்வாகப் பொறியாளர் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

வேடசந்தூர் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க அமைச்சர் வலியுறுத்தல்

Print PDF

தினமணி 27.07.2010

வேடசந்தூர் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க அமைச்சர் வலியுறுத்தல்

திண்டுக்கல், ஜூலை 26: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் இ.பெரியசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கரூர் மாவட்டம், கட்டளை பகுதியிலிருந்து வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பாளையம், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், தொப்பம்பட்டி ஆகிய இடங்களில் உள்ளோர் பயனடையும் வகையில், வேடசந்தூர் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன.

இதில் கோவிலூர் பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவுடன் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை அமைச்சர் திங்கள்கிழமை பார்வையிட்டார். இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அகிலன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

கடையநல்லூரில் ரூ.22 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணி:

Print PDF

தினமலர் 27.07.2010

கடையநல்லூரில் ரூ.22 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணி:

கடையநல்லூர்:கடையநல்லூரில் 22 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளின் மூலமாக 30 லட்சம் லிட்டர் தண்ணீர் புதிதாக பெற்றிடவும், நகர மக்களுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்திடும் வகையிலும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.கடையநல்லூர் நகராட்சியில் பெரியாற்று படுகை மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக நகர மக்களுக்கு தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரியாற்று படுகையின் மூலமாக பெறப்படும் குடிநீர் சப்ளையில் மேம்பாட்டு பணிகளை நிறைவேற்றிடும் வகையில் அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு நகராட்சி குடிநீர் வழங்கல் துறை மூலமாக இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதுடன் கடையநல்லூர் நகராட்சி மக்களுக்கு அனைத்து பகுதிகளிலும் குடிநீர் சீராகவும், முறையாகவும் கிடைத்திடும் வகையிலும் புதிதாக வாட்டர் டேங்குகள் அமைத்திடும் வகையிலும், நகராட்சியின் விரிவாக்கம் மற்றும் மக்கள் தொகையினை மையமாக கொண்டும் இதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக 21.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்பகுதி மக்களின் கோரிக்கையினை அடுத்தும், குடிநீர் மேம்பாட்டு பணிகளில் புனரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி தமிக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் கவனத்திற்கு தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் கொண்டு சென்றதை அடுத்தும் இந்த நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.

கடையநல்லூர் நகராட்சி மக்களுக்கு குடிநீர் சீராக கிடைத்திடும் வகையில் வரும் 2040ம் ஆண்டு வரை நகராட்சியின் வளர்ச்சியையும், மக்கள் தொகையையும் அடிப்படையாக கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது.இந்நிலையில் இந்த புதிய குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கான துவக்க விழா அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கிறது. மத்திய அமைச்சர் வாசன் முன்னிலையில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைக்கிறார். குடிநீர் மேம்பாட்டு திட்டத்தை பொறுத்தவரை கடையநல்லூர் நகராட்சி பகுதியில் இக்பால்நகர், மாவடிக்கால், முத்துக்கிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம், பேட்டை, மேலக்கடையநல்லூர், இந்திராநகர் ஆகிய பகுதிகளில் புதிதாக வாட்டர் டேங்குகள் அமைக்கப்படுகின்றன.

பெரியாற்று படுகையிலிருந்து புதிதாக அனைத்து பகுதிகளிலும் குழாய் பதித்திடுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் 11.5 கோடி ரூபாய் செலவிடப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும் ஆற்றுப் படுகையினை ஒட்டி புதிய கிணறு, செக் டேம் போன்றவைகளும் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே கடையநல்லூர் நகராட்சியில் பெரியாற்று படுகையின் மூலமாக நாளொன்றிற்கு சுமார் 40 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக சுமார் 33 லட்சம் லிட்டர் தண்ணீரும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.புதிதாக மேற்கொள்ளப்பட உள்ள குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளின் மூலமாக சுமார் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறும் வகையில் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன்படி கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் நாளொன்றிற்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதற்கான வழிவகையின் அடிப்படையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இப்பணிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்திட வரையறுக்கப்பட்டுள்ள போதிலும் பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு ஓராண்டிற்குள் 22 கோடி ரூபாய் செலவிலான குடிநீர் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

 


Page 199 of 390