தினகரன் 27.05.2010
வீடுகளில் இலவச கருவிகள் குடிநீர் சேமிப்புக்கு துபாய் அரசு அதிரடி
அபுதாபி, மே 27: ஐக்கிய அரபு எமிரேட்டின் தலை நகரான அபு தாபியில் ஆண்டுக்கு 7500 கோடி லிட்டர் குடிநீரை சேமிக்கும் வகையில் வீடுதோறும் நீர் சேமிப்பு கருவிகளை இலவசமாக பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அபு தாபியில் மொத்தம் 2.2 லட்சம் வீடுகள் உள்ளன. ஒவ்வொரு நபருக்கும் தலா 550 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இது உலகிலேயே மிகவும் அதிகமாகும். உலகம் முழுவதும் சராசரியாக ஒரு நபருக்கு 180 லிட்டர் தண்ணீரே போதுமானது என ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அபு தாபிவாசிகள் ஏறக்குறைய 3 மடங்கு அதிகமாக தண்ணீரை செலவழிக்கின்றனர்.
இதைக் குறைக்கும் விதத்தில் வீடுகளில் அனைத்து வீடுகளிலும் குடிநீரை சேமிக்கும் விதத்தில் பல்வேறு சாதனங்களை பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.1000 வரை சேமிக்க முடியும். முதல் கட்டமாக நடப்பு ஆண்டில் 55 ஆயிரம் வீடுகளுக்கு 3.30 லட்சம் குடிநீர் சேமிப்பு கருவிகள் பொருத்தப்படும்.
நீருடன் காற்றையும் கலந்து அனுப்பும் சாதனம், நீரின் வேகத்தை கட்டுப்படுத்தும் ரப்பர் வளையங்கள் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் 60 சதவீதம் வரை குடிநீரை சேமிக்க முடியும்.
மூன்று ஆண்டுகளில் அனைத்து வ¦டுகளிலும் இந்த சாதனங்கள் பொருத்தப்பட்டு விடும். அதன் பிறகு ஆண்டுக்கு 7500 கோடி லிட்டர் குடிநீரை சேமிக்க முடியும் என ஐக்கிய அரபு எமிரேட் அரசு தெரிவித்துள்ளது.