தினகரன் 24.05.2010
பொன்னை ஆற்றிலிருந்து ஆற்காட்டிற்கு குடிநீர்
ஆற்காடு, மே 24: முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் ஆற்காடு பஸ்நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு நகராட்சி துணைத்தலைவர் பொன்.ராஜசேகர் தலைமை தாங்கினார். ஆணையாளர் எஸ். பாரிஜாதம், பொறியாளர் சா. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை பொறியாளர் செல்வகுமார் வரவேற்றார்.
விழாவில் ஆற்காடு எம்.எல்.ஏ., கே.எல். இளவழகன் கலந்துகொண்டு உயர் மின்கோபுர விளக்கை இயக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஆற்காடு நகர குடிநீர் பிரச்னையை தீர்க்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திற்கு காவிரி நீர் வரும் வாய்ப்பு உள்ளது. அந்த நீரை ஆற்காடு நகரத்திற்கு கொண்டு வரவும், பொன்னை ஆற்றில் இருந்து ஆற்காட்டிற்கு குடிநீர் கொண்டு வரவும் இரண்டு திட்டங்கள் உள்ளது. இதில் ஏதாவது ஒரு திட்டம் மூலம் ஆற்காடு நகர குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் நந்தகுமார், சுரேஷ், கஸ்தூரி, செல்வம், வேண்டா, ஒன்றிய கவுன்சிலர் சந்திரன், போக்குவரத்து பணிமனை மேலாளர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். எம்.எல்.ஏ., இளவழகன் தகவல்