தினமலர் 18.05.2010
ஈரோடு நகரில் பிரதான குழாய் உடைப்பு 14 வார்டுகளில் இன்று குடிநீர் நிறுத்தம்
ஈரோடு: பிரதான குழாய் உடைப்பு காரணமாக மாநகராட்சியில் உள்ள 14 வார்டுகளுக்கு இன்று குடிநீர் விநியோகம் இருக்காது. மாநகராட்சியின் சென்னிமலை சாலை மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் காந்திஜி சாலை 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு செல்லும் பிரதான நீரேற்று குழாய் கொங்காலம்மன் கோவில் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. பொக்கலைன் இயந்திரம் மூலம் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி நேற்று காலையில் இருந்து நடக்கிறது. கொங்காலம்மன் கோவில் நடுசாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகராட்சியின் சென்னிமலை சாலை மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் காந்திஜி சாலையில் உள்ள 30 லட்சம் லிட்டர் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு செல்லும் பிரதாசன நீரேற்று குழாயில் கொங்காலம்மன் கோவில் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான வார்டு 17 முதல் 22, 29 முதல் 32, 41 முதல் 45 ஆகிய 14 வார்டுகளுக்கு இன்று குடிநீர் விநியோகம் செய்ய இயலாது.