தினமணி 14.05.2010
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு
தருமபுரி, மே 13: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஸ்வரன்சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் ரூ.1928.80 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
முதல் கட்டமாக காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சும் இடத்தில் நீரை திசைத்திருப்பும் வகையில் கட்டட தடுப்புப் பணிகளும், நீரை சேமித்து வைப்பதற்காக மடம் பகுதியில் அமைக்கப்படும் தரைத் தள நீர்தேக்கத் தொட்டிப் பணிகளும் நடந்துவருகின்றன.
இவற்றை ஆய்வு செய்த ஸ்வரன்சிங், பணிகளை விரைவாகவும், பாதுகாப்புடனும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் பெ. அமுதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தலைமை பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.