தினமலர் 14.05.2010
ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு
ஒகேனக்கல்: ஒகேனக்கல் பகுதியில் 214 கோடி மதிப்பில் நடந்து வரும் கூட்டு முடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்வரன்சிங் ஆய்வு செய்தார். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கிட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் முதல் கட்டமாக 214 கோடி ரூபாய் மதிப்பிட்டில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை வரும் 17ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதற்கு முன் ஏற்பாடாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஸ்வரன்சிங் திட்ட பணிகளை பார்வையிட நேற்று வந்தார்.
பென்னாகரம் அடுத்த மடம் பகுதியில் 240 லட்சம் லிட்டர் கொள்ளவில் அமைக்கப்படும் நீர் தேக்க தொட்டி கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு யானைகள் அப்பகுதிக்குள் புகுந்து சேதம் விளைவிக்காதபடி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய கேட்டு கொண்டார்.
ஒகேனக்கல்லில் நடந்து வரும் தலைமை நீரேற்று நிலையத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஜப்பான் நாட்டு ஆலோசகர்கள் கிளார்க்,லசிட்டுஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது, கலெக்டர் அமுதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய தலைமை பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணன், செயற்பொறியாளர் திருமூர்த்தி உட்பட பலர் உடன் இருந்தனர்.