தினமலர் 03.10.2013
படப்பை அருகே இரண்டு இடங்களில் பாலாறு குழாய் உடைப்பு மீண்டும் குடிநீர் வினியோகம் பாதிப்பு
தாம்பரம்:படப்பை அருகே கேபிள் புதைக்கப்பட்ட போது, பாலாறு குழாயில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இதனால், கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் பல்லாவரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம், பாலாற்றில் பழைய சீவரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, தாம்பரம், பல்லாவரம், சிட்லபாக்கம், திருநீர்மலை உள்ளாட்சி பகுதிகள், சானடோரியம் ஏற்றுமதி வளாகம் ‘மெப்ஸ்’, வண்டலுார் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
அடிக்கடி உடைப்பு
அதற்கான குழாய், வண்டலுார் வாலாஜாபாத், தாம்பரம் முடிச்சூர் சாலைகள் வழியாக வருகிறது. இந்த குழாய், பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டது என்பதால், அடிக்கடி உடைந்து விடுகிறது.
இதனால், சீரான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வண்டலுார் வாலாஜாபாத் சாலை ஓரத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம், தனியார் நிறுவனத்தினர் கேபிள் புதைத்தனர்.
அப்போது, வஞ்சுவாஞ்சேரி மற்றும் செரப்பணஞ்சேரி பகுதிகளில் மூன்று இடங்களில், குழாயை உடைத்தனர்.
இதில், 11 குழாய்கள் சேதம் அடைந்தன. இதனால், 15 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள், 10 நாட்கள் இரவு, பகலாக போராடி உடைப்பை சரிசெய்தனர்.
இந்த நிலையில், ஏற்கனவே குழாய் உடைக்கப்பட்ட இடத்திற்கு அருகே, கடந்த 30ம் தேதி, இரண்டு இடங்களில் தண்ணீர் அதிக அளவு வெளியேறியது.
ரூ. 15 லட்சம் அபராதம்
அங்கு தனியார் நிறுவனம் கேபிள் புதைக்கும் போது, குழாய் உடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கூறியதாவது:
இடங்களில் குழாய் உடைத்ததற்கு, அபராத தொகையாக 15 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டு உள்ளது. அதை சம்பந்தப்பட்ட நிறுவனம் இதுவரை செலுத்தவில்லை.
இந்த நிலையில், கூடுதலாக இரண்டு இடங்களில் உடைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.