Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தாராபுரத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம்

Print PDF

தினமணி 27.04.2010

தாராபுரத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம்

தாராபுரம், ஏப். 26: தாராபுரத்தில் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக ஒரு குடம் குடிநீர் ரூ. 2-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் தாராபுரம் நகருக்கு குடிநீர் வழங்கும் அமராவதி ஆறு முற்றிலும் வறண்டுவிட்டது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் 8 தினங்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் குடிநீரும் குறைந்த அளவே கிடைக்கிறது.

தாராபுரம் நகரில் சுமார் 1.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வது அமராவது ஆறு மட்டுமே. நகராட்சிக்கு உள்பட்ட 30 வார்டுகளுக்கு நாள்தோறும் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.

சில ஆண்டுகளுக்கு முன் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, தண்ணீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி காவிரி ஆற்றிலிருந்து நாள்தோறும் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க குடிநீர் வடிகால் வாரியத்துடன் தாராபுரம் நகராட்சி ஒப்பந்தம் செய்தது. ஆனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட நாள்முதலாகவே, குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்கப்படுவதில்லை.

குடிநீர்க் குழாய்கள் உடைப்பு, மின்தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் சராசரியாக ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் வாரத்தில் இரு தினங்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட காவிரியிலிருந்து விநியோகம் செய்யப்படுவதில்லை.

அமராவதி ஆற்றில் உள்ள கிணறுகள் மூலம் நாள்தோறும் 25 லட்சம் முதல் 30 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அமராவதி ஆறும் முற்றிலும் வறண்ட நிலையில், இருக்கும் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் வெறும் 10 லட்சம் லிட்டர் தண்ணீரே கிடைக்கிறது.

ஒரு நாளைக்கு 80 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், தற்போது 20 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால் நகரின் பல பகுதிகளிலும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. நகர்ப் பகுதிகளில் 8 தினங்களுக்கு ஒருமுறையும், புறநகர்ப் பகுதிகளில் 10 தினங்களுக்கு ஒருமுறையும் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, இருசக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குடம் தண்ணீர் ரு. 2-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் பி.சுப்பிரமணியன் கூறியது:

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் சரிவர குடிநீர் கிடைக்காததால்தான் தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது. அமராவதி ஆற்றில் புதிய ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப்பட்டு, அந்த தண்ணீர் தற்போது ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

காவிரி குடிநீர் வரும் பகுதிகள் அனைத்திலும் நகராட்சி அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

 

கோவில்பட்டி குடிநீர்த் திட்டத்திற்கு ரூ.80 கோடி

Print PDF

தினமணி 27.04.2010

கோவில்பட்டி குடிநீர்த் திட்டத்திற்கு ரூ.80 கோடி

கோவில்பட்டி, ஏப்.26 : கோவில்பட்டி நகருக்கான தனி குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.79.87 கோடி மற்றும் ஆண்டு பராமரிப்புச் செலவுக்கு ரூ.196 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்கக் கோரி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி நகர்மன்றத்தின் அவசர கூட்டம் நகர்மன்றத் தலைவி மல்லிகா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சந்திரமெüலி, ஆணையர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகர்மன்றத் தலைவி மல்லிகா பேசியதாவது:

கோவில்பட்டி நகராட்சியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் துவங்கப்பட்டு, 33 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. இதனால், குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு, நகர மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 2008-09ஆம் ஆண்டு விலைவிகிதத்தின்படி, குடிநீர்த் திட்டத்திற்கு ரூ.50.16 கோடி மற்றும் ஆண்டு பராமரிப்புச் செலவு ரூ.140 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

இந்த திட்டச் செயலாக்கத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளவும், குடிநீர்க் கட்டணம் மற்றும் வைப்புத் தொகை கட்டணத்தை உயர்த்துவதற்கும் நகர்மன்றம் 20-2-2009-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, திருத்திய திட்ட அறிக்கை அரசின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், நிதி பற்றாக்குறையால் இத் திட்டம் திருப்பி அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கோவில்பட்டி மக்களின் பொதுநலன் கருதி மீண்டும் கோவில்பட்டி நகருக்கான தனி குடிநீர்த் திட்டத்தை அனுமதிக்க கேட்டு தற்போதுள்ள விலை விகிதத்தின்படி குடிநீர்த் திட்டத்திற்கு ரூ.79.87 கோடி மற்றும் ஆண்டு பராமரிப்புச் செலவு ரூ.196 என திட்ட மதிப்பீடு தயார் செய்து, அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, மத்திய, மாநில அரசுகளிடமிருந்து மானியமாகவும் மற்றும் கடனாகவும் பெற்று திட்டத்தை நிறைவேற்றிடவும், மானியம் போக கடனாகப் பெறுகிற எஞ்சிய தொகையைச் செலுத்துவதற்கு ஏதுவாக குடிநீர்க் கட்டணம் மற்றும் குடிநீர் வைப்புத் தொகை கட்டணத்தை உயர்த்துவதற்கும் நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

உறுப்பினர் தமிழரசன் பேசுகையில், தனி குடிநீர்த் திட்டத்திற்கான தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், ஆனால், குடிநீர்க் கட்டணம் மற்றும் வைப்புத் தொகை கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார்.

மேலும், 9 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக நகர்மன்றத்தின் பொருள்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது, மாதத்திற்கு இருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை, தவறுதலாக 9 நாள்களுக்கு என குறிப்பிட்டுள்ளதைக் கண்டிக்கிறேன் என்றார்.

உறுப்பினர் செல்வமணி குடிநீர்க் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று கூறி, நகர்மன்றத்தின் பொருள் குறிப்பு அடங்கிய தாளை கிழித்தெறிந்தார்.

நகர்மன்ற உறுப்பினர்கள் ராமர் மற்றும் கருணாநிதி ஆகியோர் பேசுகையில், கோவில்பட்டி நகரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தனி குடிநீர்த் திட்டத்திற்கான தீர்மானத்தை அனைவரும் ஒன்றுசேர்ந்து நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, தனி குடிநீர்த் திட்டத்துக்கான நிதி ஒதுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத் திட்டம் அமல்படுத்திய பின்பு, குடிநீர்க் கட்டணம் மற்றும் வைப்புத் தொகை உயர்த்துவது குறித்து முடிவெடுப்போம் என்று அனைத்து உறுப்பினர்களும் கூறினர். கூட்டத்தில், நகராட்சிப் பொறியாளர் சையது அகமது, நகரமைப்பு அலுவலர் சேதுராஜன், சுகாதார அலுவலர் ராஜசேகரன், அலுவலக மேலாளர் பார்வதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

கோவில்பட்டிக்கு தனி குடிநீர் பைப் லைன் திட்டம் ரூ.79.87 கோடியில் திட்ட மதிப்பீடு : நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர் 26.04.2010

கோவில்பட்டிக்கு தனி குடிநீர் பைப் லைன் திட்டம் ரூ.79.87 கோடியில் திட்ட மதிப்பீடு : நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

கோவில்பட்டி : கோவில்பட்டி நகர தனி குடிநீர் பைப்லைன் திட்டம் நிறைவேற 79.87 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டு இருப்பதாக நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியதுகோவில்பட்டி நகராட்சியின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் மல்லிகா தலைமை வகித்தார். துணை சேர்மன் சந்திரமவுலி, கமிஷ்னர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி முன்னாள் சேர்மன் பெரியநாயகம் தமிழரசன் இறந்ததை நினைவு கொண்டு ஒருநிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து அவசர கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய முக்கிய கருத்துக்கள் குறித்து சேர்மன் மல்லிகா பேசினார். அப்போது கோவில்பட்டி நகருக்கு தனிபைப்லைன் திட்டம் கொண்டு வர ஏற்கனவே அனுப்பப்பட்ட திட்டம் நிதிபற்றாக்குறையால் திருப்பப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் திட்டத்தை தற்போதைய விலை நிலவரப்படி 79.87 கோடியில் மாற்றி அரசின் அனுமதி பெற அனுப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.தொடர்ந்து கூட்டப்பொருட்கள் வாசிக்கப்பட்டது. இதில் முதல் கூட்டப்பொருளான குடிநீர் திட்டம் குறித்து கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர். அப்போது குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட அனுமதி கேட்டு தீர்மானம் இருந்ததால் எதிர்ப்பு தெரிவித்த காங்., பெண் கவுன்சிலர் செல்வமணி தீர்மான நகலை கிழித்தார். மேலும் சிபிஐ கவுன்சிலர் தமிழரசன் குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதை காரணமாக கொண்டு ஏற்கனவே குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போதும் உயர்த்த கேட்டுள்ளதை எதிர்க்கிறேன் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து திமுக கவுன்சிலர் ராமர் பேசும்போது, தற்போது மானியக் கோரிக்கை நடந்து வருவதால் கோவில்பட்டி குடிநீர் தனி பைப்லைன் திட்ட தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

இறுதியில் கோவில்பட்டி நகர குடிநீர் திட்டத்தினை அனுமதிக்க கேட்டு தற்போதைய விலை நிலவரப்படி ரூ.79.87 கோடி மற்றும் ஆண்டு பராமரிப்பு செலவு ரூ.196 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்கும் நிலையில் கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்கலாம் என்றும் முடிவானது. கூட்டத்தில் நகர அமைப்பு அலுவலர் சேதுராஜன், சுகாதார அலுவலர் ராஜசேகரன், இன்ஜினியர் செய்யது அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 27 April 2010 07:36
 


Page 253 of 390