தினமலர் 22.04.2010
ஸ்ரீவி.,யில் குடிநீர் லாரி சிறைபிடிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ.,காலனி பகுதியில் குடிநீர் வழங்காததால் லாரியை சிறைபிடித்தனர்.ஸ்ரீவி., நகராட்சி சார்பில் என்.ஜி.ஓ.,காலனி பகுதியில் மூன்று நாளுக்கொரு முறை லாரிகள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரமாக இப்பகுதியில் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால் இப்பகுதியிலுள்ள போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு மட்டும் மினி லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. நேற்று காலை மினி லாரியில் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு குடிநீர் வழங்கி விட்டு வந்த லாரியை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிறை பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் நகராட்சி அதிகாரிகள் பேசியதில் லாரிகள் மூலம் மீண்டும் அப்பகுதியில் குடிநீர் வழங்கப்படுமென தெரிவித்ததையடுத்து லாரியை பெண்கள் விடுவித்தனர்.