Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

உபயோகமற்ற ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முயற்சி!

Print PDF

தினமணி 19.04.2010

உபயோகமற்ற ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முயற்சி!

கிருஷ்ணகிரி, ஏப். 18: உபயோகமற்ற ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

பருவமழை பொய்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்கும் வகையில் இம்மாவட்டத்துக்கு ரூ.2 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இம்மாவட்டத்தில் நிலத்தடி நீர் கடந்த ஆண்டைக் காட்டிலும், 10 மீட்டர் குறைந்துள்ளது. இதனால், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியங்களில் அரசு அமைத்துக் கொடுத்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் தண்ணீர் இல்லாததால், பயனற்று உள்ளன.

இந்நிலையில் பருவ காலங்களில் பெய்யும் மழைநீரை வீணாக்காமல், உபயோகமற்ற ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் திட்டத்தை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதன்படி, மழைக் காலங்களில், மழைநீர் செல்லும் வழித் தடத்தில் உபயோகமற்று கிடக்கும் ஆழ்துளைக் கிணற்றை சுற்றி 3 மீ. விட்டம், 3 மீ. ஆழத்துக்கு குழி வெட்டப்பட்டு, அதில் பல்வேறு அளவுகளைக் கொண்ட ஜல்லி கற்கள் மற்றும் மணல் நிரப்பப்படும். இவ்வாறு செய்வதால் மழைநீரானது நேரடியாக ஆழ்துளைக் கிணற்றின் வழியாக நிலத்தடிக்குச் செல்லும். இதன் மூலம் மழைநீர் வீணாகாமல் நிலத்தடி நீர் 3 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளது.

மேலும் இந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகேயுள்ள குடிநீர் வழங்கும் ஆழ்துளைக் கிணறு மற்றும் விவசாயக் கிணறுகளில் நீர் ஆதாரம் உயர வாய்ப்புள்ளது.

"ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தும் திட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் தடதாரை, ராமசந்திரண், மாதேப்பட்டி, நல்லூர் மற்றும் பர்கூர் ஒன்றியத்தில் குட்டூர் ஆகிய கிராமங்களில் ரூ.2.5 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நல்ல பலன் கிடைத்தால் நடப்பாண்டில் மேலும் 14 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தபட உள்ளது' என கிராம குடிநீர்த் திட்ட கோட்ட அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

Last Updated on Monday, 19 April 2010 10:54
 

நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு

Print PDF

தினமணி 19.04.2010

நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு

அம்பாசமுத்திரம், ஏப். 18: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தொழிற்சாலை தேவைகளுக்கு இந்த அணைகளில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டு பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் பெய்த காரணத்தால் அணைகள் அனைத்தும் நிரம்பின.

கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், இவ்விரு மாவட்டங்களில் பரவலாக குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகப் புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக, குடிநீர் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலும் பரவலாக குடிநீர்த் தட்டுப்பாடு எழுந்துள்ளது.

விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் அமைத்து, குடிநீர்த் திட்டங்களுக்கு நேரடியாக நீரைக் கொண்டுசென்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் பிற பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முன் கார்பருவ சாகுபடி தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அணைகளின் நீர்மட்டம் நிலவரம் வருமாறு:

பாபநாசம் அணையில் 80.50, சேர்வலாறு அணையில் 90.35, மணிமுத்தாறு அணையில் 84.85 அடியாக இருந்தது.

பாபநாசம் அணையில் இருந்து 505 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. மணிமுத்தாறு அணையில் இருந்து பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு 350 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் குடிநீர்த் திட்ட உறைகிணறுகள் அமைந்துள்ள பகுதிக்கு போதிய நீர் கிடைக்காமல் குடிநீர் விநியோகம் முழுமையாகச் செய்ய முடியாத நிலை இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர்த் திட்டங்கள் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கோடைக்காலத்தில் மேடான பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில்லை என்ற கருத்தும் உள்ளது. அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும் இம்மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு எழுந்திருப்பது பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது. எனவே குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Monday, 19 April 2010 10:49
 

குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை : புதிய கலெக்டர் காமராஜ் பேட்டி

Print PDF

தினமலர் 19.04.2010

குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை : புதிய கலெக்டர் காமராஜ் பேட்டி

மதுரை : ''குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது'', எனமதுரை மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற சி.காமராஜ் கூறினார்.
மதுரை கலெக்டராக இருந்த மதிவாணன் நீண்ட நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றார். அவருக்கு பதில் புதிய கலெக்டர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப் பட்டது. இதைத் தொடர்ந்து சி.காமராஜ் கலெக்டராக அறிவிக்கப் பட்டார். நேற்று அவர் முகாம் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

கலெக்டர் பொறுப்பை கவனித்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உசிலம்பட்டி அருகே போத்தம் பட்டியில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமத்துவபுரம் பணிகள் விரைவுபடுத்தப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 93 கிராமங்களில், பணிகள் விரைவில் தேர்வு செய்யப் பட்டு செயல்படுத்தப்படும். விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. இலந்தைகுளம், வடபழஞ்சி பகுதிகளில் தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும்.

மேலூர் அருகே அம்பலக்காரன் பட்டியில் அமைய உள்ள டிராக்டர் தொழிற்சாலை, இடையபட்டி தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வு மையம் போன்றவற்றுக்கு இடம் கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது. விரைவில் பணி துவங்கும். மேலூரில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலையும் விரைவில் துவக்கப்படும்.

தற்போது கோடைகாலம் என்பதால் வைகை அணை நீரை பொறுத்தவரை, மதுரை நகருக்கு மே இறுதி வரை தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல ஊரக பகுதிகளை பொறுத்தவரை குடிநீர் தட்டுப்பாடுள்ள கிராமங்களில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரை நகரின் முக்கிய திருவிழாவான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றார்.

Last Updated on Monday, 19 April 2010 06:13
 


Page 264 of 390