Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மே மாதத்திலிருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் : கவுண்டம்பாளையம், வடவள்ளிக்கு அடித்தது 'லக்'

Print PDF

தினமலர் 17.04.2010

மே மாதத்திலிருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் : கவுண்டம்பாளையம், வடவள்ளிக்கு அடித்தது 'லக்'

பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், இவ்விரு பகுதிகளிலும் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. கோவை நகருக்கு அருகே உள்ள கவுண்டம்பாளையம் நகராட்சி, வடவள்ளி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் 2007 ஜூலை மாதம் துவக்கப்பட்டது.

பவானி ஆற்றில் தேக்கம்பட்டியில் நான்கு மீட்டர் ஆழம், ஆறு மீட்டர் விட்டமுள்ள உள்வாங்கி கிணற்றில் நீர் தேக்கி 3100 எச்.பி., திறனுள்ள மோட்டார்களால் நீர் உந்தப்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு 61 மீட்டர் நீளத்துக்கு 4583 லிட்டர் என்ற அளவில் பிரதானக் குழாயில் நீர் செல்லும்.பவானியிலிருந்து வீரபாண்டி பிரிவு நீர் உந்து நிலையத்திற்கு வந்து சேரும் நீர் அங்குள்ள 100 எச்.பி., அளவில் உள்ள 3 மோட்டார் மூலம் உந்தப்படும். மூன்றாவது மற்றும் 4வது கட்டத்துக்கு பிறகு, மேல்நிலைத் தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு, வினியோகம் செய்யப்படும்.

திட்ட மதிப்பீட்டு காலம் 18 மாதம் என நிர்ணயம் செய்யப் பட்டது. இதன்படி, 2008 டிசம்பருக்குள் பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆட்கள் பற்றாக்குறை, மூலப்பொருட்களின் விலையேற்றம், தொடர் மழை என பல காரணங்களால் 2009 மார்ச் வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அப்போதும் பணிகளை முடிக்க முடியவில்லை. பல ஆண்டுகளாக இழுத்து வந்த இந்த பணி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சில தினங்களுக்கு முன் தேக்கம்பட்டியில் இருந்து 6.2 கி.மீ., தொலைவிலுள்ள செல்லப்பனூர் வரை பதிக்கப் பட்டுள்ள குழாயில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை விட்டு, சோதனை ஓட்டம் நடத்தப் பட்டது.

அதன் பின், கவுண்டம்பாளையம் நகராட்சி வரை சோதனை ஓட்டம் முடிந்தது. இப்போது 95 சதவீதப் பணிகள் முடிந்து விட்டன. நீர் வினியோகத்துக்காக, கவுண்டம்பாளையம் நகராட்சியில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள 2 தொட்டிகளும், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள 2 தொட்டிகளும், 4 லட்சம் லிட்டர் கொள் ளளவுடன் 2 தொட்டிகளும், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் ஒரு தொட்டியும் என மொத்தம் 7 மேல்நிலை குடிநீர்த்தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டன. மொத்தம் 50 கி.மீ., நீளத்துக்கு வீடுகளுக்கான குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் நகராட்சித் தலைவர் சுந்தரம் கூறுகையில், '' கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 70 லட்சம் லிட்டரும், வடவள்ளி பேரூராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் நீரும் தேவைப்படுகிறது. தற்போது, இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பில்லூர் குடிநீர் சப்ளையாகிறது. இத்திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதால் மே மாத துவக்கத்தில் இருந்து அனைத்து வீடுகளுக்கும் 3 நாட்களுக்கு ஒரு முறை 2 மணி நேரம் குடிநீர் வினியோகம் நடக்கும்,'' என்றார். இத்திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதால் கவுண்டம்பாளையம் நகராட்சியிலும், வடவள்ளி பேரூராட்சியிலும் உள்ள பல லட்சம் மக்களுக்கு நீண்ட நாட் களாக இருந்த குடிநீர் பிரச் னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

Last Updated on Saturday, 17 April 2010 06:27
 

வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்னை விடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலர் ஆலோசனை

Print PDF

தினமணி 16.04.2010

வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்னை விடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலர் ஆலோசனை

வேலூர், ஏப். 15: வேலூர் மாவட்டத்தில் சராசரி மழை பெய்யாததால் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்ப்பது குறித்து தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, வருவாய் நிர்வாக ஆணையாளர் சுந்தரதேவன் ஆகியோர் விடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரனுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: வேலூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கைபம்புகள், பவர் பம்புகள், கிணறுகள், மினி பவர் பம்புகள் மூலம் குடிநீர் வழங்க ரூ.6.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2005 ஆண்டுக்குப் பின் பாலாறு வறண்டு காணப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. குடிநீர் பிரச்னையை போக்க ரூ.27 கோடி திட்ட மதிப்பீடு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது முதற்கட்டமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிதி மூலம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னையைப் போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் எ.சரவணவேல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கேபிரியல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 16 April 2010 10:31
 

குடிநீர் விநியோகத்திற்கு மின்தடை கூடாது

Print PDF

தினமணி 16.04.2010

குடிநீர் விநியோகத்திற்கு மின்தடை கூடாது

விழுப்புரம், ஏப். 15: தமிழகத்தில் எங்கும் வறட்சி இல்லை; ஒரு சில இடங்களில் குடிநீர் பிரச்னை மட்டும் உள்ளது. குடிநீர் விநியோகத்திற்கு மின்தடை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர்களுடன் விடியோ கான்பரன்சிஸிங் மூலம் ஆலோசனை நடத்திய தலைமைச் செயலர் ஸ்ரீபதி தெரிவித்தார்.

÷தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைகள் குறித்து விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, வருவாய் நிர்வாக ஆணையர் சுந்தரத்தேவன் ஆகியோர் வியாழக்கிழமை காலை விடியோ கான்பரன்ஸிங் மூலம் ஆலோசனை நடத்தினர்.

÷அப்போது அவர்கள் கூறியது:

÷தமிழகத்தில் சில இடங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது. அதற்காக அனைவரும் சொல்வது போல் வறட்சி என்கிற சூழ்நிலை கிடையாது. நீங்கள் அரசியல்வாதிகள் கிடையாது, அதிகாரிகள். வறட்சி என்கிற வார்த்தையை தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது.

÷ஆட்சியர்கள் அனைவரும் குடிநீர் பிரச்னைகள் குறித்து கணக்கெடுங்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அறிக்கை பெறுங்கள். நீராதாரம் எவ்வளவு உள்ளது என்று முதலில் ஆய்வு செய்யுங்கள். அதன்பிறகு ஆழ்துளை கிணறுகள் போடுங்கள்.

திட்டங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். உண்மையிலேயே பாதிக்கப்படும் நிலையில் உள்ள இடங்களுக்கு தேவையான நிதியை தரத்தயாராக உள்ளோம். குடிநீர் விநியோகத்திற்கு மின் இணைப்பு துண்டிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுளளது என்று தெரிவித்தனர்.

÷அப்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி கூறியது:

÷விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவில் குடிநீர் பிரச்னை இல்லை. சின்னசேலம், கள்ளக்குறிச்சி, வானூர், மேல்மலையனூர் போன்ற இடங்களில் மட்டும் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. ஆனால் கடும் பாதிப்பு இல்லை.

÷திண்டிவனம் நகராட்சியில் தினசரி ரூ.20 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்ய வேண்டியுள்ளது. மின்தட்டுப்பாடு உள்ளதால், ஜெனரேட்டர் வாங்க நிதி கேட்டுள்ளோம். தலைமைச் செயலர் தற்போது தெரிவித்துள்ள கருத்தின்படி, மின் துறையை அணுகி, குடிநீர் விநியோகத்திற்கு மின்வெட்டு இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.

÷அப்போது தலைமைச் செயலர், அனைத்து ஆட்சியர்களுக்கும் கூறியது:

÷குடிநீர் பிரச்னைகள் குறித்து சாலை மறியல் செய்யும் அளவுக்கு பிரச்னைகள் உண்டா, அப்படி இருந்தால் அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள் என்றார். மேலும் விழுப்புரம் மாவட்டத்துக்கு கோடைக்கால குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Last Updated on Friday, 16 April 2010 10:26
 


Page 266 of 390