தினமணி 16.04.2010
குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
கொடைக்கானல், ஏப். 15: கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் சில மாதங்களாக மழை பெய்யாததால் பல்வேறு இடங்களில்
குடிநீர்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நகர்ப் பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே நகராட்சிக் குழாய்களில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
புறநகர்ப் பகுதிகளான உகார்த்தே நகர், கார்மேல்புரம், தைக்கால், செண்பகனூர், இருதையபுரம், சகாயபுரம், நாயுடுபுரம், ஈ.சி. சாலை ஆகிய பகுதிகளில் குடிநீர் இல்லாமல் நெடுந்தூரம் சென்று ஓடையில் செல்லும் சுகாதாரமற்ற தண்ணீரை வடிகட்டி அப்பகுதி மக்கள் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொடைக்கானலில் 3 மாதங்களாக மழை இல்லாததால் ஊற்றுகளில் தண்ணீர் இல்லை, குடிநீர்த் தேக்கத்திலும் தண்ணீர் அளவு குறைந்து காணப்படுகிறது. இருக்கின்ற தண்ணீரை குறைந்த அளவே விநியோகித்து வருகிறோம். மேலும் கொடைக்கானல் நகராட்சிக்குச் சொந்தமான கிணற்றில் தண்ணீர் எடுத்து குழாய்கள் இல்லாத பகுதிகளுக்கு லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சில இடங்களில் தண்ணீர் ஊற்றுள்ள பகுதிகளில் மின் மோட்டர் பொருத்தி குழாய் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் பொது மக்கள் தண்ணீரை அதிகம் செலவு செய்யாமல் சிக்கனமாக செலவு செய்ய நகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.