Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Print PDF

தினமணி 16.04.2010

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கொடைக்கானல், ஏப். 15: கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானலில் சில மாதங்களாக மழை பெய்யாததால் பல்வேறு இடங்களில்

குடிநீர்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நகர்ப் பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே நகராட்சிக் குழாய்களில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

புறநகர்ப் பகுதிகளான உகார்த்தே நகர், கார்மேல்புரம், தைக்கால், செண்பகனூர், இருதையபுரம், சகாயபுரம், நாயுடுபுரம், .சி. சாலை ஆகிய பகுதிகளில் குடிநீர் இல்லாமல் நெடுந்தூரம் சென்று ஓடையில் செல்லும் சுகாதாரமற்ற தண்ணீரை வடிகட்டி அப்பகுதி மக்கள் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கொடைக்கானலில் 3 மாதங்களாக மழை இல்லாததால் ஊற்றுகளில் தண்ணீர் இல்லை, குடிநீர்த் தேக்கத்திலும் தண்ணீர் அளவு குறைந்து காணப்படுகிறது. இருக்கின்ற தண்ணீரை குறைந்த அளவே விநியோகித்து வருகிறோம். மேலும் கொடைக்கானல் நகராட்சிக்குச் சொந்தமான கிணற்றில் தண்ணீர் எடுத்து குழாய்கள் இல்லாத பகுதிகளுக்கு லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சில இடங்களில் தண்ணீர் ஊற்றுள்ள பகுதிகளில் மின் மோட்டர் பொருத்தி குழாய் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் பொது மக்கள் தண்ணீரை அதிகம் செலவு செய்யாமல் சிக்கனமாக செலவு செய்ய நகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.

Last Updated on Friday, 16 April 2010 09:56
 

குடிநீர் பிரச்னை: விடியோ கான்பரன்ஸ் முறையில் தலைமைச் செயலர் ஆலோசனை

Print PDF

தினமணி 16.04.2010

குடிநீர் பிரச்னை: விடியோ கான்பரன்ஸ் முறையில் தலைமைச் செயலர் ஆலோசனை

திண்டுக்கல், ஏப். 15: திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலாருடன் தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி வியாழக்கிழமை விடியோ கான்பரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த ஆண்டின் சராசரி மழை அளவு 836 மி.மீ. கடந்த ஆண்டு 172 மி.மீ. குறைந்து 656 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.

இதனால் மாவட்டத்தின் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பிரச்னையைத் தீர்க்க ஆழ்குழாய் கிணறுகள், கிணறுகளை ஆழப்படுத்துவது போன்ற பணிகளில் குடிநீர் வடிகால் வாரியத்தின் நீர்நில ஆய்வாளர் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனையின்போது அறிவுறுத்தப்பட்டது.

தலைமைச் செயலருடனான ஆலோசனை குறித்து ஆட்சியர் கூறியதாவது:

திண்டுக்கல், வேடசந்தூர், நிலக்கோட்டை, தொப்பம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. மேலும் திண்டுக்கல் நகராட்சிப் பகுதியில் 12 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது 9 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பழனியில் 5 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கொடைக்கானல் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இல்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பற்றாக்குறை உள்ள இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

Last Updated on Friday, 16 April 2010 09:54
 

குடிநீர் தட்டுப்பாடு: அதிக நிதி ஒதுக்க கோரிக்கை

Print PDF

தினமணி 16.04.2010

குடிநீர் தட்டுப்பாடு: அதிக நிதி ஒதுக்க கோரிக்கை

சென்னை, ஏப்.15: குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை இது குறித்து அவர்கள் விடுத்த கோரிக்கை:

ஞானசேகரன் (காங்கிரஸ்): குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வேலூர் மாவட்டத்துக்கு ரூ. 2 கோடி ஒதுக்கியுள்ளதற்கு நன்றி. இந்த நிதி வேலூர் நகரத்துக்குக்கூட போதாது.

வேலூர் மாவட்டத்துக்கு மட்டும் குடிநீர் தேவையைச் சமாளிக்க ரூ. 65 கோடி தேவை. மாவட்ட ஆட்சியர் ரூ. 25 கோடி கேட்டுள்ளார். குறைந்தபட்சம் வேலூர் மாவட்டத்துக்கு ரூ. 45 கோடியாவது ஒதுக்க வேண்டும்.

ராமசாமி (இந்திய கம்யூனிஸ்ட்): குடிநீர் தேவையை சமாளிக்க விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ரூ. 1 கோடி ஒதுக்க வேண்டும்.

பேரவையில் இன்று...

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் கிடையாது. காலை பேரவை தொடங்கியதும், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்.

இதன் பின், பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், அதற்கு அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுரையும் இடம்பெறுகிறது.

Last Updated on Friday, 16 April 2010 09:49
 


Page 267 of 390