தினமணி 16.04.2010
வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்னை விடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலர் ஆலோசனை
வேலூர், ஏப். 15: வேலூர் மாவட்டத்தில் சராசரி மழை பெய்யாததால் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்ப்பது குறித்து தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, வருவாய் நிர்வாக ஆணையாளர் சுந்தரதேவன் ஆகியோர் விடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரனுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: வேலூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கைபம்புகள், பவர் பம்புகள், கிணறுகள், மினி பவர் பம்புகள் மூலம் குடிநீர் வழங்க ரூ.6.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2005 ஆண்டுக்குப் பின் பாலாறு வறண்டு காணப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. குடிநீர் பிரச்னையை போக்க ரூ.27 கோடி திட்ட மதிப்பீடு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது முதற்கட்டமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்நிதி மூலம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னையைப் போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எ.சரவணவேல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கேபிரியல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.