Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடியாத்தம் நகர குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க 13 ஆழ்துளைக் கிணறுகள்

Print PDF

தினமணி 18.03.2010

குடியாத்தம் நகர குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க 13 ஆழ்துளைக் கிணறுகள்

குடியாத்தம், மார்ச் 17: குடியாத்தம் நகரில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க போர்க்கால நடவடிக்கையாக 13 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் எம். பாஸ்கர் கூறினார். இதற்காக முதற்கட்டமாக பொதுநிதியிலிருந்து ரூ. 22 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

குடியாத்தம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் பசுமாத்தூர், போடிப்பேட்டை நீரேற்று நிலையங்களை தலைவர், நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். அதன்பின் தலைவர் எம். பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது:

குடியாத்தம் நகரில் 7 ஆயிரம் வீட்டுக் குழாய் இணைப்புகளும், 347 பொதுக் குழாய்களும் உள்ளன. நகருக்கு நாளொன்றுக்கு 86 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

குடியாத்தம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் பசுமாத்தூர் நீரேற்று நிலையத்தில் உள்ள 8 கிணறுகளில் 6 கிணறுகள் வறண்டு விட்டன. 12 ஆழ்துளை கிணறுகளில் 7 வறண்டு விட்டன. போடிப்பேட்டை நீரேற்று நிலையத்தில் உள்ள 2 கிணறுகளும் வற்றி விட்டன.

தற்போது மேற்கண்ட நீரேற்று நிலையங்கள் மூலம் தினமும் 17 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. அத்துடன் நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள 383 சிறு மின் விசைப் பம்புகள் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு நகரின் குடிநீர்ப் பிரச்னை தீர்க்கப்பட்டு வருகிறது. மேலும் நகரிலுள்ள 36 வார்டுகளுக்கும் 8 லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

கோடைக்காலம் வந்து விட்டதால் தண்ணீர்ப் பிரச்னை பூதாகாரமாகிவிடும் என்பதால் போர்க்கால அடிப்படையில் பசுமாத்தூரில் 5 ஆழ்துளைக் கிணறுகளும், போடிப்பேட்டையில் 4, செதுக்கரையில் 2, சந்தப்பேட்டையில் 2 ஆக மொத்தம் 13 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார். குழாய்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்களின் பம்புகள் பறிமுதல் செய்யப்படும் என்றார் பாஸ்கர்.

நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன், பொறியாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 18 March 2010 11:08
 

புதுகையில் நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் 'கட்'

Print PDF

தினமலர் 18.03.2010

புதுகையில் நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் 'கட்'

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நாளை முதல் 3 நாட்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது. இது குறித்து நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் காவிரி குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோக குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (19ம் தேதி) முதல் 21ம் தேதி வரை குடிநீர் விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 18 March 2010 07:01
 

உள்ளாட்சிகளில் கோடையில் சீரான குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

Print PDF

தினமலர் 18.03.2010

உள்ளாட்சிகளில் கோடையில் சீரான குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

திருநெல்வேலி: கோடை காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெல்லையில் நடந்த முன்னெச்சரிக்கை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

கோடை காலத்தில் ஏற்படும் வறட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் தலைமை வகித்து கலெக்டர் ஜெயராமன் பேசியதாவது:நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தாமிரபரணி நதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் கிராமங்கள், டவுன் பஞ்., பகுதிகள், நகராட்சி பகுதிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்க, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குடிநீர் வழங்க தேவையான மின்சார பகுதிகளை மின்சார வாரிய அலுவலர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். திசையன்விளை பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் குடிநீர் வினியோகம் குறித்து இன்று (18ம் தேதி) ஆய்வு செய்கின்றனர்.நான்குநேரி திசையன்விளை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகிக்க குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் இப்பணிகள் நிறைவடையும். கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.கோடை காலத்தில் பஞ்., தலைவர்கள் தங்கள் பகுதியில் சின்டெக்ஸ் தொட்டிகளை அமைத்து குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டும். குடிநீர் வினியோக குழாய்கள் பழுதடைந்திருந்தால் அவற்றை அகற்றி புதிய குழாய்கள் பதிக்க குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலநீலிதநல்லூர், தாழையூத்து, மானூர் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், பஞ்.,யூனியன் உதவி இன்ஜினியர்கள், பஞ்., தலைவர்கள் இணைந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.இதில் திட்ட அலுவலர் சங்கர், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் மோகன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் ராம்குமார், ரமேஷ், ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜ ஜெயபாலா, பஞ்.,களின் உதவி இயக்குனர் திரவியம், சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பார்வதி சங்கர், பஞ்.,யூனியன் தலைவர்கள் மணி, அன்புமணி கணேசன், சிங்கம்புலி பாண்டியன், விஸ்வாமித்ரன், பி.ஆர்.ஓ ரவீந்திரன், மானூர், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், பாளை பஞ்.,யூனியன்களை சேர்ந்த 167 கிராம பஞ்., தலைவர்கள், டவுன் பஞ்., தலைவர்கள், பி.டி.ஓக்கள், டவுன் பஞ்., செயல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 18 March 2010 06:41
 


Page 287 of 390