தினமணி 18.03.2010
குடியாத்தம் நகர குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க 13 ஆழ்துளைக் கிணறுகள்
குடியாத்தம், மார்ச் 17: குடியாத்தம் நகரில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க போர்க்கால நடவடிக்கையாக 13 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் எம். பாஸ்கர் கூறினார். இதற்காக முதற்கட்டமாக பொதுநிதியிலிருந்து ரூ. 22 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
குடியாத்தம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் பசுமாத்தூர், போடிப்பேட்டை நீரேற்று நிலையங்களை தலைவர், நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். அதன்பின் தலைவர் எம். பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
குடியாத்தம் நகரில் 7 ஆயிரம் வீட்டுக் குழாய் இணைப்புகளும், 347 பொதுக் குழாய்களும் உள்ளன. நகருக்கு நாளொன்றுக்கு 86 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
குடியாத்தம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் பசுமாத்தூர் நீரேற்று நிலையத்தில் உள்ள 8 கிணறுகளில் 6 கிணறுகள் வறண்டு விட்டன. 12 ஆழ்துளை கிணறுகளில் 7 வறண்டு விட்டன. போடிப்பேட்டை நீரேற்று நிலையத்தில் உள்ள 2 கிணறுகளும் வற்றி விட்டன.
தற்போது மேற்கண்ட நீரேற்று நிலையங்கள் மூலம் தினமும் 17 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. அத்துடன் நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள 383 சிறு மின் விசைப் பம்புகள் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு நகரின் குடிநீர்ப் பிரச்னை தீர்க்கப்பட்டு வருகிறது. மேலும் நகரிலுள்ள 36 வார்டுகளுக்கும் 8 லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கோடைக்காலம் வந்து விட்டதால் தண்ணீர்ப் பிரச்னை பூதாகாரமாகிவிடும் என்பதால் போர்க்கால அடிப்படையில் பசுமாத்தூரில் 5 ஆழ்துளைக் கிணறுகளும், போடிப்பேட்டையில் 4, செதுக்கரையில் 2, சந்தப்பேட்டையில் 2 ஆக மொத்தம் 13 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார். குழாய்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்களின் பம்புகள் பறிமுதல் செய்யப்படும் என்றார் பாஸ்கர்.
நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன், பொறியாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.