Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம்ஏரி திறப்பு

Print PDF

தினபூமி             17.08.2013

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம்ஏரி திறப்பு

http://www.thinaboomi.com/sites/default/files/Jaya1(C)_100.jpg 

சென்னை, ஆக. 17 - சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து இன்று முதல் நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கு வகை செய்ய புைதிய வீராணம் திட்டம்ூ எனது தலைமையிலான அரசால் 2004-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போது அந்தத் தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு, அப்பகுதியின் பாசனத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

காவேரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 2.8.2013 முதல் தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டிருந்தேன். தற்போது, மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக வீராணம் ஏரியில் 935.20 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

எனவே, வீராணம் ஏரியிலிருந்து இன்று (17.8.2013) முதல் சென்னை மாநகர குடிநீருக்காக நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

சென்னைக்கு வீராணம் தண்ணீர் திறப்பு: இன்று மாலை வந்து சேரும்

Print PDF

மாலை மலர்             17.08.2013

சென்னைக்கு வீராணம் தண்ணீர் திறப்பு: இன்று மாலை வந்து சேரும்
 
சென்னைக்கு வீராணம் தண்ணீர் திறப்பு: இன்று மாலை வந்து சேரும்
சென்னை குடிநீர் பிரச்சினையை சமாளிப் பதற்காக 2004–ம் ஆண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் புதிய வீராணம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் வரத் தொடங்கியது.

கோடையில் வீராணம் ஏரி வறண்டதால் சென்னைக்கு தண்ணீர் வருவது தடைப்பட்டது. தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு இருப்பதால் வீராணத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, வீராணம் ஏரியில் இருந்து இன்று முதல் சென்னைக்கு தண்ணீர் திறக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று காலை 11 மணி அளவில் வீராணத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் சந்திர மோகன், கடலூர் மாவட்ட கலெக்டர் கிலோஸ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வீராணம் ஏரியில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய் மூலம் சென்னை வருகிறது. முதலில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் நெய்வேலி அருகில் இருக்கும் வடக்குத்து என்ற இடத்துக்கு வருகிறது. அங்கிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள காடாம்புளியூர் கொண்டு வரப்படும். வீராணம் தண்ணீர் அங்கு சுத்திகரிக்கப்படுகிறது.

பின்னர் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் குழாயில் பயணிக்கும் வீராணம் குடிநீர் சென்னை வந்து சேருகிறது. இங்கு போரூர், கே.கே.நகர், சூளைமேடு, வளசரவாக்கம், ஆலந்தூர் பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

வேளச்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கு நெம்மேலியில் இருந்து கடல்நீரை சுத்திகரித்து வரும் குடிநீருடன் கலந்து வினியோகம் செய்யப்படுகிறது.

வீராணத்தில் இருந்து திறக்கப்பட்ட குடிநீர் இன்று மாலை சென்னை வந்து சேரும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். வீராணத்தில் இருந்து சென்னைக்கு தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வருகிறது.

 

சேலம் மாநகரில்3 நாள்களுக்கு குடிநீர் நிறுத்தம்

Print PDF

தினமணி              16.08.2013

சேலம் மாநகரில்3 நாள்களுக்கு குடிநீர் நிறுத்தம்

சேலம் மாநகராட்சிப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாக, மாநகராட்சி ஆணையர்

மா.அசோகன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட  செய்திக் குறிப்பு: 

சேலம் மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் மேட்டூர் - ஆத்தூர் குடிநீர் வழித் தடத்தில் குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதற்கான பராமரிப்புப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மேற்கொள்கிறது. இதனால், சேலம் மாநகராட்சிப் பகுதிகளுக்கு இந்த 3 நாள்களிலும் குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

 


Page 30 of 390