Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

'சென்னைக்கு டிசம்பர் வரை குடிநீர் தட்டுப்பாடு இல்லை'

Print PDF

தினமலர் 12.02.2010

'சென்னைக்கு டிசம்பர் வரை குடிநீர் தட்டுப்பாடு இல்லை'

சென்னை : ""கிருஷ்ணா நீர் வரத்து உள்ளதாலும், ஏரிகளில் போதுமான அளவுக்கு நீர் இருப்பதாலும், டிசம்பர் வரை சென்னையில் குடிநீர் பிரச்னை இருக்காது,'' என, சென்னை குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.சென்னையை சுற்றிலும் உள்ள பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழை மூலம் கிடைக்கும் நீரை தேக்கி, ஆண்டு முழுவதும், சென்னை குடிநீர் வாரியம் மக்களுக்கு நீரை வழங்கி வருகிறது.இந்த நான்கு ஏரிகள் தவிர, வீராணம் ஏரியில் இருந்தும் குடிநீருக்காக குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபரில் துவங்க வேண்டிய மழை, நவம்பர் மத்தியில் துவங்கி சரியான அளவில் பெய்யவில்லை.

இருந்தாலும், ஓரளவிற்கு ஏரிகள் நிரம்பின. இதனிடையில், ஆந்திர அரசு தர வேண்டிய கிருஷ்ணா நீரும் சென்னைக்கு வந்ததால், தற்போது ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.நேற்றைய நிலவரப்படி, நான்கு ஏரிகளையும் சேர்த்து 6,665 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 8,832 மில்லியன் கன அடிநீர் இருப்பு இருந்தது. கடந்தாண்டை விட, 2,167 மில்லியன் கன அடிநீர் குறைவாகும்.கண்டலேறு அணையில் இருந்து, வினாடிக்கு 346 கன அடி கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏரியில் இருந்து வினாடிக்கு, 316 கன அடிநீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரால், புழல் ஏரி நிரம்பி வருகிறது.ஏரியில் நேற்றைய நிலவரப்படி, 2,413 மில்லியன் கன அடிநீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு, 220 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு, 125 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரி நிரம்பி, தற்போது ஏரியில், 1,465 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது.ஏரியில் இருந்து பாசனத்திற் காக வினாடிக்கு, 200 கன அடிநீரும், குடிநீருக்காக வினாடிக்கு, 75 கன அடிநீரும் திறந்து விடப் படுகிறது.

ஏரி நீர் இருப்பு தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:சென்னை மக்களுக்கு ஒருவருக்கு தினசரி 105 லிட்டர் என்ற அளவில் நகர் முழுவதும் 600 முதல் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந் ஒதது. ஏரிகளின் நீர் இருப்பை பாதுகாக்கவும், கோடைக் காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், தற்போது நீர் வினியோக அளவு 570 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர வேண்டும். 2008ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009 ஏப்ரல் வரை 6.8 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. அடுத்ததாக 2009 செப்டம்பர் முதல் இதுவரை 4.3 டி.எம்.சி., நீர் வந்துள்ளது.இடையில், தெலுங்கானா பிரச்னை காரணமாக நீர் நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடர்ந்து தற்போது வந்து கொண்டிருக்கிறது.வீராணம் ஏரியில் இருந்து தினசரி, 180 மில்லியன் லிட்டர் தண் ணீர் வந்து கொண்டிருக் கிறது. தற்போது உள்ள நீர் இருப்பை வைத்து வரும் டிசம்பர் வரை அதாவது அடுத்த மழைக்காலம் வரை சமாளிக்கலாம்.இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

Last Updated on Friday, 12 February 2010 06:41
 

காவிரி குடிநீர் வினியோக அறிவிப்புக்கு இறுதிகெடு: மார்ச் முதல் தடையின்றி கிடைக்குமாம்

Print PDF

தினமலர் 09.02.2010

காவிரி குடிநீர் வினியோக அறிவிப்புக்கு இறுதிகெடு: மார்ச் முதல் தடையின்றி கிடைக்குமாம்

ராமநாதபுரம்: "மாவட்டம் முழுவதும் காவிரி குடிநீர் வினியோகம் மார்ச் முதல் தடையின்றி கிடைக்கும்,' என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறையாவது அதிகாரிகள் தங்கள் உறுதிமொழியை நிறைவேற்றுவார்களா, என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வறட்சியின் பிடியிலிருந்த ராமநாதபுரத்தின் தாகம் தீர்க்க காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. 616கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்ட இத்திட்டம், ராமநாதபுரம் மட்டுமின்றி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களும் பயன்பெறும் வகையில் விரிவாக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் மாவட்டத்தை சேர்ந்த 2332 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. துணை முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், ராமநாதபுரத்தில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் ,""அடுத்த 30 நாட்களில் மாவட்டம் முழுவதும் காவிரி நீர் வினியோகம் பூர்த்தியடையும்,'' என , தெரிவித்தார். அதன் பின் நடந்ததோ, சோகத்திலும் சோகம் தான். தலைநகர் ராமநாதபுரத்திலேயே காவிரி நீர்வினியோகம் படுமாந்தமாக நடந்து வருகிறது. அப்படியிருக்கும் போது, ஊரக பகுதிகளின் நிலையை சொல்லித்தெரியவேண்டியதில்லை. பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், கீழக்கரை, ராமேஸ்வரம் என எங்கு பார்த்தாலும் காவிரி நீர் வீணாகும் காட்சிகள் ஏராளம்.

இங்கு இப்படியென்றால், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் காவிரி எப்போது வரும் என்பதே தெரியவில்லை. பரமக்குடி-ராமநாதபுரம் இடையே காவிரி குடிநீர் இணைப்பு குழாய் சென்ற போதிலும், இடையில் உள்ள சத்திக்குடிக்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இது போல் இணைப்பு பெறாத பகுதிகளே மாவட்டத்தில் நிறைய உள்ளன. கோடி கணக்கில் பணத்தை செலவு செய்தும், பயன் என்று பார்த்தால், அதில் ஒரு பங்கு கூட இல்லை. நிலை இப்படியிருக்கும் போது, ""மார்ச் ஒன்று முதல் மாவட்ட முழுவதும் காவிரி நீர் வினியோகம், தடையின்றி வழங்கப்படும்,'' என, கலெக்டர் ஹரிஹரன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் கூறும்,இது போன்ற உறுதிமொழிகளால் எரிச்சலடைந்துள்ள மாவட்ட மக்கள், மாவட்ட நிர்வாகத்தின் இந்த உறுதிமொழிக்கு இறுதிகெடு அளித்துள்ளனர். "எது எப்படியோ விடிவு பிறந்தால் சரிதான்,' என, புலம்பும் பொதுமக்கள் தரப்பின் ஒரு பிரிவினரும் எதிர்பார்ப்பில் காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உத்தரவு உபயோகம் தருமா?: தடையில்லாத காவிரி நீர் வினியோக அறிவிப்பு குறித்து கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில்,"" மாவட்டத்தில் காவிரி நீர் வினியோக சோதனை பணிகள், இணைப்பு குழாய் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தேன். எமனேஸ்வரம், பார்த்திபனூர், கமுதி , கடலாடி பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கான உரிய கருத்துரு தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன். மாவட்டத்தில் காவிரி நீர் தொடர்பான பணிகள் அனைத் தையும் நிறைவு செய்து, மார்ச் ஒன்று முதல் அனைத்து பகுதிக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Last Updated on Tuesday, 09 February 2010 09:07
 

புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கடையநல்லூர் நகர்மன்றத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி 09.02.2010

புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கடையநல்லூர் நகர்மன்றத்தில் தீர்மானம்

கடையநல்லூர், பிப். 8: கடையநல்லூர் நகராட்சியில் ஏற்கனவே உள்ள குடிநீர் கட்டணத்தை உயர்த்தாமல் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை மாலை தலைவர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காளிராஜ், ஆணையர் அப்துல் லத்தீப், பொறியாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகராட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 21.41 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த குடிநீர் முன்வைப்புத் தொகை மற்றும் குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் மற்றும் டி.என்.யு.டி.எப் தெரிவித்துள்ளது.

எனவே தற்போது குடியிருப்பு உபயோகங்களுக்கான (வீடுகள்) குடிநீர் இணைப்புக்களுக்கு பெறப்பட்டு வரும் முன்வைப்புத் தொகை 4000-6000 ஆக உயர்த்தவும், மேலும் தற்போது மாதம் ஒன்றுக்கு வசூலிக்கப்பட்டு வரும் குடிநீர் கட்டணம் ரூ. 50 100 ஆக உயர்த்தவும், குடியிருப்பு இல்லாத உபயோகங்களுக்கான குடிநீர் இணைப்புக்களுக்கான முன்வைப்புத் தொகையை ரூ. 8000-லிருந்து. 10,000 ஆக உயர்த்தவும், தற்பொழுது மாதம் ஒன்றுக்கு வசூலிக்கப்பட்டு வரும் குடிநீர் கட்டணம் 100 , 200 ஆக உயர்த்தவும் (அல்லது 1000 லிட்டருக்கு ரூ. 20) மன்ற அனுமதி கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் மன்றத்தில் கடும் அமளி நிலவியது.

தீர்மானத்தை ரத்துசெய்ய வேண்டும் என உறுப்பினர்கள் சங்கரநாராயணன், ராமநாதன், கருப்பையா, சரஸ்வதி மற்றும் முஸ்லீம் லீக் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இதன் சாதக அம்சங்களை நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையர் எடுத்துக் கூறினர்.

இதையடுத்து தீர்மானத்தை ரத்துசெய்யும் முடிவை உறுப்பினர்கள் கைவிட்டனர். பின்னர் ஏற்கெனவே உள்ள குடிநீர் கட்டணத்தை உயர்த்தாமல் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பிரச்னை காரணமாக மன்றத்தில் கடும் சலசலப்பு நிலவியது.

கடையநல்லூர் நகராட்சியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முறையற்ற வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் என்ற முறையில் நான் பல முறை இது குறித்துப் பேசியும், மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

எனவே மக்கள் பணி செய்ய முடியாத இந்த வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என, நகர்மன்ற உறுப்பினர் சங்கரநாராயணன் அதற்கான கடிதத்தையும் நகர்மன்றத் தலைவரிடம் கொடுத்தார்.

ராஜிநாமா செய்யப்போகிறேன்: நகர்மன்றத் தலைவர்

இந்நிலையில், நகர்மன்றக் கூட்டத்தில் புதிய குடிநீர்த் திட்டம் தொடர்பான விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள் திட்டத்தை எதிர்த்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

தலைவர் பல முறை மைக்கில் பேசியும் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை. திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

திட்டத்தை ரத்து செய்ய வேண்டாம், அதற்கு பதில் குடிநீர் கட்டணத்தை உயர்த்தாமல் புதிய திட்டத்தை கொண்டு வர கோரி தீர்மானம் நிறைவேற்றுவோம் என தலைவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உறுப்பினர்கள் தொடர்நது பேசிக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து பேசிய தலைவர் இப்ராஹிம் தான் கூறுவதை யாரும் கவனிக்கவில்லை. எனக்கு மரியாதை இல்லை. எனவே நான் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டால் உங்களைப் போல் உறுப்பினராக மாறி சப்தம் போட்டு பேச முடியும். எனவே நான் ராஜிநாமா செய்கிறேன் என வேதனையுடன் தெரிவித்தார். இதனையடுத்து உறுப்பினர்கள் அமளியைக் குறைத்து தலைவரின் பேச்சை கவனித்தனர்.

Last Updated on Tuesday, 09 February 2010 07:16
 


Page 304 of 390