தினகரன் 04.02.2010
வீராணம் ஏரி நிரம்பியது கோடையில் சென்னைக்கு குடிநீர் பிரச்னை வராது
காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரி 12 மாதங்களுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் பிரச்னை வராது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த டிசம்பரில் பெய்த பருவ மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பத் தொடங்கியது. வெள்ள அபாயத்தை தவிர்க்க முழு கொள்ளளவான 47.5 அடியை தேக்க வேண்டாம் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். அதன்படி, பொதுப்பணித்துறையினர் தண்ணீரை குறைந்த அளவில் தேக்கி வெள்ளத்தால் கிராமங்கள் பாதிக்காத வகையில் பாதுகாத்தனர். சென்னைக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் அனுப்பி வந்தனர்.
தற்போது மழை சீசன் முடிந்துவிட்டதால் ஏரியில் முழு கொள்ளளவு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009&ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2&ம் தேதி வீராணம் ஏரியில் முழு கொள்ளளவு நீரை பொதுப்பணித்துறையினர் தேக்கி வைத்தனர். 12 மாதங்களுக்கு பிறகு இப்போது ஏரி முழுமையாக நிரம்பியுத்து. இதனால் சென்னைக்கு கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாக உள்ளது. சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடிவீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.