Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வைகை 2-வது கூட்டுக் குடிநீர் விநியோகப் பணிகள்: மதுரையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு

Print PDF

தினமணி 29.01.2010

வைகை 2-வது கூட்டுக் குடிநீர் விநியோகப் பணிகள்: மதுரையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு

மதுரை, ஜன. 28: மதுரையில் வைகை 2}வது கூட்டுக் குடிநீர் விநியோகப் பணிகளை, செல்லூர் பகுதியில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பி. செந்தில்குமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

முன்னதாக, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரியை அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பாக, காவேரி குடிநீர்த் திட்டப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், ஆனையூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் நலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர், ஆனையூர் பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், திருமங்கலம் நகராட்சியில் பழுதடைந்துள்ள சாலைகளையும் அவர் பார்வையிட்டு, சாலைகளை செப்பனிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றம் பேரூராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகக் கட்டடப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

தொடரந்து, மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தில் 2}வது வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகப் பணிகளையும் நிர்வாக இயக்குநர் ஆய்வு செய்து, விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

பொதுமக்கள் புகார்: அப்போது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பகுதி பொதுமக்களிடம் விசாரித்தபோது, குடிநீர் அளவு மிகவும் குறைவாக வருவதாகப் புகார் தெரிவித்தனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் அவர் கேட்டபோது, ரேஸ்கோர்ஸ் பகுதி குடிநீர் தொட்டியிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இப்பகுதி கடைசியாக இருப்பதால் குடிநீர் அளவு குறைகிறது.

எனவே, பீபீகுளம் குடிநீர் மெயின் பைப்புடன் மீனாம்பாள்புரம் பகுதிக்கு பைப் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி அதிகாரிகளுக்கு இயக்குநர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் எஸ். செபாஸ்டின், தலைமைப் பொறியாளர் ரகுநாதன், துணை மேயர் பி.எம். மன்னன், உதவி கமிஷனர் (வருவாய்) ரா. பாஸ்கரன், எம்.எல்.ஏ. மூர்த்தி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

 

3வது கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கூடுதலாக 1.90 கோடி லிட்டர் குடிநீர்

Print PDF

தினமணி 29.01.2010

3வது கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கூடுதலாக 1.90 கோடி லிட்டர் குடிநீர்

திருப்பூர், ஜன.28: மக்கள்தொகை பெருக்கத்தை அடுத்து திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஊராட்சிகள், 2 நகராட்சிகளுக்கு 3வது கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கூடுதலாக 1.90 கோடி லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலினிடம் திருப்பூர் எம்எல்ஏ சி.கோவிந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு கொண்டுவரப்படும் 3வது கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிபாளையம், தொட்டியபாளையம், வீரபாண்டி, நெருப்பெரிச்சல், தொட்டியமண்ணரை, முதலிபாளையம், முருகம்பாளையம், ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம், முத்தணம்பாளையம் ஆகிய 11 ஊராட்சிகள் மற்றும் 15வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகளுக்கு தற்போது நாளொன்றுக்கு 1,58,47,000 லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகரையொட்டி அமைந்துள்ள இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு இக்குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது மக்கள்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளதை அடுத்து இக்குடிநீர் போதுமானதாக இல்லாததால் சுமார் 10 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், நிலவும் குடிநீர் பற்றாக்குறையை அடுத்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, தற்போதைய மக்கள்தொகை, எதிர்காலத்தில் அதிகரிக்கும் மக்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 3வது கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் திருப்பூர் மாநகரையொட்டி அமைந்துள்ள அந்த 11 ஊராட்சிகளுக்கு 1,35,08,000, 15 வேலம்பாளையம் நகராட்சிக்கு 30 லட்சம், நல்லூர் நகராட்சிக்கு 25 லட்சம் என மொத்தம் 1,90,08,000 லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்க வேண்டும் என்று அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலினை நேரில் சந்தித்த திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி இதுகுறித்து கோரிக்கையை முன்வைத்தார். கோரிக்கையை ஏற்ற துணை முதல்வர் அந்த ஊராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ததாக எம்எல்ஏ கோவிந்தசாமி தெரிவித்தார்.

 

ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: ரூ. 237 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டப் பணிகளுக்கு அனுமதி

Print PDF

தினமணி 29.01.2010

ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: ரூ. 237 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டப் பணிகளுக்கு அனுமதி

சென்னை, ஜன.28: ரூ. 237 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை நிறைவேற்ற ஹைதராபாத் நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டம் நிறைவேறுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவரும் நிலையில், திட்டத்துக்கான பணிகளுக்கு அனுமதி அளித்திருப்பது கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துமெனகருதப்படுகிறது.

இது குறித்து வியாழக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரூ. 237.18 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை மேற்கொள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த ".வி.ஆர்.சி.எல் இன்ப்ராஸ்ட்ரக்சர்' என்ற நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நீர் உள்வாங்கும் கட்டமைப்பு, இயல்பு நீர் உந்து உறை, இயல்பு நீர் இறைப்பான், இயல்பு நீர் உந்துக்குழாய், நாளொன்றுக்கு 156 மில்லியன் லிட்டர் திறனுடைய சுத்திகரிப்பு நிலையம், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடத்தும் குழாய், நீர் உந்து நிலையம், 240 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள நீர்தேக்கத் தொட்டி, மின்னணு தகவல் பரிமாற்றம் மற்றும் குறிப்பு சேகரித்தல் ஆகியவை முதல் கட்டப் பணிகளில் அடங்கும்.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,755 ஊரகக் குடியிருப்புகளில் உபயோகிக்கப்படும் குடிநீரில் ப்ளோரைடு உப்புகளின் அளவு 1 லிட்டர் குடிநீரில் 1.5 முதல் 12.4 மில்லிகிராம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மத்திய சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனத்தின் வரையறைப்படி 1 லிட்டர் குடிநீரில் 1.5 மில்லிகிராம் மட்டுமே ப்ளோரைடு உள்ளது. பல ஆண்டுகளாக ப்ளோரைடு கலந்த குடிநீரைப் பருகி வருவதால் இம்மாவட்டங்களில் உள்ள மக்கள், மூட்டு, முதுகெலும்பு, கைகால் ஆகியன வளைதல், முடக்குவாதம், பற்கள் காவியாதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த இரு மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்கள் என்பதால் கோடைக்காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்படுகிறது. எனவே ப்ளோரைடு பாதிப்பில் இருந்து தடுக்கவும், தேவையான குடிநீர் வழங்கவும் ரூ. 1,928.80 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை 5 கட்டங்களில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் பேர் பயன்பெறுவர் என்று அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 


Page 310 of 390