தமிழ் முரசு 07.08.2013
தூர்வாரும் பணி முடிந்து மகாமக குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது
கும்பகோணம்:கும்பகோணம் மகாமகம் குளம் தூர்வாரி சீரமைப்பட்டதை தொடர்ந்து குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது.
கும்பகோணத்தில்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழாவில் லட்சக்கணக்கான
பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவது வழக்கம். 5 ஏக்கர் பரப்புள்ள
இக்குளம் கடும் வறட்சியின் காரணமாக 2 மாதங்களாக தண்ணீரின்றி வறண்டு
காணப்பட்டது. இதையடுத்து நகராட்சி சார்பில் இந்து சமய அறநிலைய துறையிடம்
அனுமதி பெற்று, சிட்டி யூனியன் வங்கியின் நன்கொடை மூலம் ரூ.15 லட்சத்தில்
மகாமக குளம் தூர் வாரப்பட்டது.
இதன் மூலம் குளம் முழுவதும் 2 அடி
ஆழத்துக்கு மண் அப்புறப்படுத்தப்பட்டு ஒரு அடி அளவில் ஆற்று மணல்
நிரப்பப்பட்டது. நேற்று மாலை மணிக்கூண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில்
இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அறநிலைய துறை ஆணையர் தனபால், தண்ணீரை
திறந்து வைத்து பூக்களை தூவினார். காசி விஸ்வநாதர் கோயில் சார்பில், மகாமக
குளம் இனி வற்றாமல் இருக்க வேண்டும் என மகா சங்கல்பம் செய்து கொண்டனர்.
பின்னர்
விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, நவநதி பூஜை செய்தனர். அப்போது வேத
விற்பன்னர்கள் ருத்ரம், சமகம், ஜபம் பாராயணம் செய்தனர். நிகழ்ச்சியில்
இந்து அறநிலைய துறை இணை ஆணையர் சுவாமிநாதன், உதவி ஆணையர் மாரியப்பன்,
முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன், நகர மன்ற தலைவர் ரத்னாசேகர் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.
குளத்தின் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க
தொட்டி ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் இருந்து தற்போது
தண்ணீர் விடப்படுகிறது. அரசலாற்றில் இருந்து வழக்கமாக மகாமக குளத்துக்கு
தண்ணீர் விடுவது வழக்கம். அரசலாற்றில் தண்ணீர் வந்ததும் வழக்கம் போல
விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.