தினமணி 21.01.2010
ரூ.47 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம்
வெள்ளக்கோவில்,ஜன. 20: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், காங்கயம், மூலனூர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.47.74 கோடி மதிóபபில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளிóத்துள்ளதாக மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: வெள்ளக்கோவில் தொகுதியில் நடப்பு நிதியாண்டில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 45 குடிநீர் வடிகால் வாரியப் பணிகள் முடிவடைந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
வெள்ளக்கோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.47.74 கோடி ஒதுக்கீடு செய்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்படி, வெள்ளக்கோவில் நகராட்சிக்குட்பட்ட வேலகவுண்டன்பாளையம்,சிவநாதபுரம்,அகலரைப்பாளையம்புதூர் சாலை, முத்தூர் சாலை ஆகிய நான்கு இடங்களில் ரூ.12 கோடியே 4 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்படுகிறது.
காங்கயம் பேரூராட்சியில் கோவை சாலை, திருப்பூர் சாலை என இரண்டு இடங்களில் ரூ.9 கோடியே 29 லட்சம் செலவில் இரண்டு மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்படுகிறது.
வெள்ளக்கோவில் மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 174 புதிய கிராமக் குடியிருப்புக்களுக்கும்,ஏற்கனவே காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வரும் 354 குடியிருப்புக்களுக்கும் கூடுதலாக குடிநீர் வழங்கும் வகையில் ரூ.26 கோடியே 41 லட்சம் செலவிடப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 105 புதிய மேல்நிலைத் தொட்டிகளும்,ஏற்கனவே உள்ள 69 மேல்நிலைத் தொட்டிகள் பராமரிப்பு மற்றும் பகிர்மானக் குழாய் அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளன என்றார்.
ஈரோடு,கரூர்,திருப்பூர் மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் டி.பாலசுப்பிரமணியன்,திருப்பூர் மாவட்ட கிராம குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் சோ.மா.மோகன்பாபு,பராமரிப்பு பொறியாளர்கள் ராம்,அகமது அலி ஆகியோர் உடனிருந்தனர்.