தினமணி 13.01.2010
சுத்திகரிக்கப்படாத குடிநீர் விற்றால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி
சென்னை, ஜன.12: சுத்திகரிக்கப்படாத குடிநீரை பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் சுத்திகரிக்கப்படாத குடிநீரை குறிப்பிட்ட நிறுவனம் விற்பனை செய்வதாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறைக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து உதவி சுகாதார அலுவலர் டாக்டர் ரேவதி ரோஸ்லின் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட நிறுவனம் திறந்த வெளியில் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து, சீல் வைத்தனர்.