Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கர்நாடகத்தில் குடிநீர் கட்டணம் உயருகிறது: அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு தகவல்

Print PDF

தினமணி 04.01.2010

கர்நாடகத்தில் குடிநீர் கட்டணம் உயருகிறது: அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு தகவல்

பெங்களூர், ஜன.3: கர்நாடகத்தில் குடிநீர்க் கட்டணம் விரைவில் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு தெரிவித்தார்.

குடிநீர், வடிகால் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான அவர் பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் குடிநீர்த் தேவை மற்றும் விநியோகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் அரசுக்கு சில பிரச்னைகளும் சிரமமும் ஏற்பட்டு வருகிறது.

பெங்களூர் குடிநீர் விநியோக மற்றும் வடிகால் வாரியத்துக்கு தற்போது 50 சதவிகிதம் வருமானம் குறைந்துள்ளது.

இந்த பிரச்னைகளை சமாளிக்கவும், மக்களுக்குப் போதுமான அளவு குடிநீர் விநியோகிக்கும் நோக்கிலும் கர்நாடகத்தில் குடிநீர்க் கட்டணம் விரைவில் உயர்த்தப்படும். தனியார்நிறுவனங்கள் மற்றும் அறிவியல் அமைப்புகள் மூலம் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் வழங்கும்.

பெங்களூரில் உள்ள அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் பயன்பாட்டில் இல்லை. ஆனாலும் சில போர்வெல்களில் 24 மணி நேரமும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, போர்வெல்களைப் பராமரித்து கண்காணிக்க 10 போர்வெல்களுக்கு ஒரு பொறியாளர் வீதம் நியமிக்கப்படுவர். போர்வெல் தண்ணீரைப் குறிப்பிட்ட கால நேரங்களில் பயன்படுத்த விதிமுறைகள் கொண்டுவரப்படும்.

பெங்களூரில் உள்ள ஏரிகளின் ஆழம் அதிகரிக்கப்படும். இதன் மூலம் மழை காலங்களில் அதிக தண்ணீரை சேமிக்கலாம். மழை நீரை அதிக அளவு சேமித்து முறையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூர் நகரின் குடிநீர்த் தேவையை சமாளிக்க புறநகர்ப் பகுதிகளில் அணைக்கட்டுகள் கட்டப்படும் என்றார்.

Last Updated on Monday, 04 January 2010 09:32
 

வேலூரில் 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை: ஆணையர்

Print PDF

தினமணி 31.12.2009

வேலூரில் 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை: ஆணையர்

வேலூர்,டிச.30: வேலூர் நகராட்சி பகுதியில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வேலூர் மாநகர்மன்ற கூட்டத்தில் ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.

மாநகர்மன்ற கூட்டம் புதன்கிழமை மேயர் ப. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் செல்வராஜ், துணை மேயர் தி.. முகமது சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வேலூரில் குடிநீர் விநியோகிக்கும் நேரத்தை முன்கூட்டியே தெரிவித்தால் பொதுமக்கள் காத்திருந்து தண்ணீர் பிடிக்க ஏதுவாக இருக்கும் என்று மதிமுக உறுப்பினர் நீதி கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த ஆணையர் செல்வராஜ், 15 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் 3 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இனி 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். லாங்கு பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உறுப்பினர் ஜி.ஜி. ரவி கேட்டுக் கொண்டார். அவர்களுக்கு மாற்று இடம் ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தலாம் என்று மேயரும், ஆணையரும் கூறினர்.

நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் என்ன செய்தாலும் தடுக்க முடியவில்லை என்று பி.பி. ஜெயபிரகாஷ் புகார் தெரிவித்தார்.

இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் செய்யலாம் அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றார் மேயர்.

வேலூரில் போக்குவரத்து சிக்கலை நெறிப்படுத்த ஆட்டோக்களை வரைமுறைப் படுத்த வேண்டும் என்று பாலசுந்தரமும், எம்ஜிஆர் நகரில் கழிப்பிடத் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் வருகிறது என்று சண்முகமும் தெரிவித்தனர்.

மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள கணினிகள் எத்தனை செயல்படுகிறது என்று தெரியவில்லை, கோட்டை சுற்றுச்சாலையில் எக்ஸ்னோராவுக்கு இடம் ஒதுக்கி, குப்பையை எருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அது செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளது என்று சீனிவாசகாந்தி கேள்வியெழுப்பினார்.

கணினிகள் தொடர்ந்து பராமரிக்கும் வகையில் தான் விற்பனையாளரிடம் ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. எக்னோராவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆணையர்.

சாலை, குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் பெற்று 4 மாதங்களாகியும் பணிகள் தொடங்கவில்லை என்று பிச்சமுத்து குற்றம் சாட்டினார். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்தார். அதையடுத்து கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Thursday, 31 December 2009 09:56
 

ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிக்கான இடங்கள் ஆய்வு!. 2010 மார்ச் மாதம் துவங்க துரித நடவடிக்கை

Print PDF

தினமலர் 31.12.2009

ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிக்கான இடங்கள் ஆய்வு!. 2010 மார்ச் மாதம் துவங்க துரித நடவடிக்கை

தர்மபுரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பணிகளான திட்டம் நிறைவேற்றும் பகுதி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாதம் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட புவி அமைப்புப்படி நிலத்தடி நீரில் அதிக அளவில் ஃப்ளோரைடு உள்ளது. இதனால், இந்த நீரை பருகுவோருக்கு பல் கரைபடிதல், எலும்பு, தோல், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்ட மக்களின் ஆயுள் நாட்கள் குறைவதாக டாக்டர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இவ்விரு மாவட்ட மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் திட்டம் கொண்டு வர 50 ஆண்டாக தமிழக அரசு முயற்சி எடுத்தும், திட்டத்துக்கான நிதி மற்றும் திட்ட பணிக்கான தொழில் நுட்ப பிரச்னைகள் காரணமாக 50 ஆண்டுகள் திட்ட பணிகள் தள்ளி போய் வந்தது. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகள் கொடுத்த நிலையில், கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் தி.மு.., அரசு ஆட்சிக்கு வந்தால் திட்டத்தை நிறைவேற்ற உறுதி கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்ற ஜப்பான் பன்னாட்டு வங்கி குழுவிடம் கடன் உதவி பெற முயற்சிகள் எடுக்கப்பட்டு, கடந்தாண்டு திட்டத்தை நிறைவேற்ற கடன் உதவி வழங்கிட ஜப்பான் பன்னாட்டு வங்கி ஒப்புதல் வழங்கியது.

கடந்தாண்டு (2008) பிப்ரவரி 26ம் தேதி தர்மபுரியில் நடந்த விழாவில், முதல்வர் கருணாநிதி 1,334 கோடியில் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. உலகளவிய ஐந்து தொகுப்பாக டெண்டர் விடும் பணியில் தொய்வு ஏற்பட்ட லையில் இத்திட்டத்துக்கான திட்ட மதிப்பீடு தற்போது 1,928 கோடியே 80 லட்சமாக உயர்ந்துள்ளது. ஐந்து தொகுப்பு டெண்டரில் முதல் தொகுப்புக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, ஜப்பான் பன்னாட்டு வங்கி குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொகுப்பு இரண்டு, மூன்று மற்றும் ஐந்துக்கான டெண்டர் விடுவதற்கான நடவடிக்கைகள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிற நான்கு தொகுப்புக்கான டெண்டர் பணிகள் முடிக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டு குழு ஒப்புதல் பெற்று திட்ட பணிகளை வரும் மார்ச் மாதம் முதல் துவங்க குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தர்மபுரியில் இருந்து 45 கி.மீ., தூரத்தில் உள்ள காவிரியில் இருந்து தண்ணீரை பம்பிங் செய்து, அங்கிருந்து 6.2 கி.மீ., தூரத்தில் உள்ள வனப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் 1,500 மி.மீட்டர் விட்டமுள்ள இருப்பு குழாய் மூலமாக ஆற்று நீர் கொண்டு செல்லப்படுகிறது.

பின் 12 ஏக்கர் பரப்பில் 127.6 (எம்.எல்.டி) மில்லியன் லிட்டர் கொள்ளவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முழுமையாக தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, 1,800 மீட்டர் தூரத்தில் உள்ள இடைநிலை நீருந்து நிலையத்துக்கு 1,500 மி.மீட்டர் இரும்பு குழாய் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது. இடைநிலை நீருந்து நிலையத்தில் இருந்து மடம் பகுதியில் 240 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்டு குடிநீர் சேகரிப்பு தரை மட்ட தொட்டி கட்டப்பட்டு அங்கிருந்து பிரதான குழாய்கள் மூலம் குடிநீர் பல பகுதிக்கும் பிரித்து கொடுக்கப்படுகிறது. முதல் கட்டமாக ஆற்றுப்படுகையில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய் பகுதி, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடம், மடம் பகுதியில் தரைமட்ட தொட்டி அமைக்கும் இடம் ஆகிய பகுதி நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு, நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. திட்ட பணிகள் நடக்கும் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அறிவிப்பு பலகைகள் தற்போது, முதல் கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு வரும் மார்ச்சில் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Thursday, 31 December 2009 07:04
 


Page 317 of 390