தினகரன் 30.12.2009
குடிநீர் கட்டணம் உயர்த்த மாமன்றத்தில் முடிவு
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் 2ம் பில்லூர் குடிநீர் திட்டம் நிறைவேற்றிய பிறகு கட்டண உயர்வை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் 36 தீர்மானங்கள் மாமன்ற ஒப்புதலுக்கு முன் வைக்கப்பட்டன. இதில் குடிநீர் கட்டணம் உயர்த்துவது தொடர்பான தீர்மானம் முன் வைக்கப்பட்டது.
அதில், ஐவஹர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பில்லூர் 2வது தனி குடிநீர் திட்டப்பணிகள் ரூ.113.74 கோடி மதிப்பில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பணிகள் அடுத்தாண்டு 2010 இறுதியில் முடிவுயும் போது திட்டமதிப்பீட்டு தொகை ரூ.140 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்கென நிர்வாக ஒப்புதல் பெறப்பட்ட மதிப்பீட்டு தொகை ரூ.113.74 கோடியில் 70 சதவிகிதம் மானிய நிதி போக மீதமுள்ள 30 விழுக்காடு மாநகராட்சி பங்கு தொகை மற்றும் மதிப்பீட்டு தொகைக்கும் கூடுதலான ஒப்பந்த தொகையுடன் சேர்த்து மாநகராட்சி ரூ.50 கோடிக்கும் மேலாக மாநகராட்சி குடிநீர் நிதியில் இருந்து ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது.
பில்லூர் 2ம் குடிநீர் திட்டம் முடிவடைந்து மாநகருக்கு கூடுதல் குடிநீர் பெறப்பட்ட பின்பு மாநகர் முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என கூறப்பட்டிருந்தது. கவுன்சிலர்கள் விவாதத்திற்கு பிறகு, குடிநீர் கட்டண உயர்வுக்கு மாமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது குறித்து மேயர் பேசுகையில், ‘பில்லூர் இரண்டாம் குடிநீர் திட்டம் நிறைவேற்றிய பிறகு, மாநகருக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் துவங்கிய பிறகு தான் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும். பில்லூர் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற மாமன்ற ஒப்புதல் வழங்கினால் தான் மானியம் கிடைக்கும், மேலும் பணிகள் தொடர்ந்து நடக்கும் என்பதால், இத்தீர்மானத்திற்கு மாமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது’ என்றார்.
பெரு நகர திட்டத்தின் கீழ் உள்ளாட்சிகளின் நிலை உயர்த்துதல், 30 உள்ளாட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பான தீர்மானம் மன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. இத்தீர்மானம் நிறைவேற்ற அனைத்து கட்சி கவுன்சிலர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு செய்வது எனவும், அது வரை தீர்மானத்தை ஒத்திவைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.