தினகரன் 03.06.2010
கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அடுத்த மாதம் திறப்பு
பொன்னேரி, ஜூன் 3: ‘காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்’ என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மீஞ்சூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க, 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.87.80 கோடி மதிப்பிலான இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.
இந்த நிலையம், நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்டது. காட்டுப்பள்ளியில் இருந்து சென்னைக்கு சுமார் 38 கி.மீ. தூரத்துக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையத்தை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். பின்னர், கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து குடிநீரை சென்னை நகருக்கு கொண்டு செல்லும் கட்டமைப்புகளின் சோதனை இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் கூறுகையில், ‘‘கடல் நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள் முடிந்துள்ளன. இதை அடுத்த மாதம் முதல் வாரத்தில், முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்’’ என்றார்.
குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சிவ்தாஸ் மீனா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.