தினமணி 26.07.2010
ஒசூர் புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்கள் திறப்பு
ஒசூர், ஜூலை 25: ஒசூர் புதிய பஸ் நிலையத்தில், இரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்களை நகர்மன்றத் தலைவர் எஸ்.ஏ.சத்யா திறந்துவைத்தார்.
பயணிகளின் குடிநீர் தேவைக்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இவ்விரு இயந்திரங்களையும் வணிகர் சங்கம் அமைத்துள்ளது. பஸ் நிலையம் நுழையும் இடத்தில் ஒரு இயந்திரமும், பஸ்கள் வெளியில் செல்லும் இடத்தில் மற்றொரு இயந்திரமும் உள்ளன. இவற்றின் பராமரிப்பை ஒசூர் வணிகர் சங்கமே மேற்கொள்கிறது.
பஸ் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் அந்தோனிசாமி தலைமை வகித்தார்.
ஒசூர் வணிகர் சங்கத் தலைவர் தாமஸ்ஜான், செயலர் பாஸ்கர், நகர்மன்றத் துணைத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் வீ.விஜயகுமார், அ.யுவராஜ், ரமேஷ்பாபுஎல்லோரா மணி, இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.