தினகரன் 26.07.2010
ஓசூர் புதிய பேருந்து நிலையத்தில் ரூ 10 லட்சத்தில் குடிநீர் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறப்பு
ஓசூர், ஜூலை 26: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், புதிய பேருந்து நிலையம் சுமார் ரூ11 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 18ம் தேதி தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நான்கு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம், இதற்கு முன் ஒரு பேரூர் பேருந்து நிலையமாக இருந்தது. இதை மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படும் வகையிலும், நவீன பேருந்து நிலையமாக 3 சுரங்க பாதை கொண்டதாகவும், செயற்கை நீருற்று கொண்ட பேருந்து நிலையமாகவும், 53 பேருந்துகள் நிற்கும் வகையில் இன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையம் இன்று நகரத்திற்கு மட்டுமின்றி தாலுகா மக்களுக்கு பயன்படும் வகையில் நவீனமாக கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்த நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க மிக வேகமாக பேருந்து நிலையத்தை நகராட்சி சார்பில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
வரும் ஆகஸ்ட் 1 முதல் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அளிக்க டிரேடர்ஸ் அசோசியேசன் சார்பில் சுத்திகரிக்கும் இரண்டு இயந்திரங்களை ரூ5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் 10 வருட பராமரிப்பு பணிக்கு
ரூ5 லட்சம் அளிக்கப்பட்டது. 1 மணி நேரத்திற்கு 500 லிட்டர் வீதம் இரண்டிலும் 1 மணி நேரத்திற்கு ஆயிரம் லிட்டர் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது.
இந்த சுத்தகரிப்பு இயந்திரங்களை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வணிக பேரவை துணை தலைவர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ஹேம்ராஜ், சிப்காட் அரிமா சங்க தலைவர் ஸ்ரீதர்ராம்மோரே ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் சத்யா, துணைத்தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சுத்திகரிப்பு இயந்திரங்களை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் விஜய்குமார், அக்ரோநாகராஜ், யுவராஜ், இக்ரம்அகமத், கேஜி பிரகாஷ் உட்பட 15க்கும் மேற்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.