தினமலர் 09.08.2010
சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர் கிடைப்பதில் தாமதம்
சென்னை: குடிநீர் குழாய்களை சுத்தம் செய்யும் பணி நடப்பதால், சென்னை மக்களுக்கு மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பயன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை, கடந்த 31ம் தேதி, முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
மொத்தம் 600 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, மணலி, மாதவரம் மற்றும் செங்குன்றம் ஆகிய இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை, காட்டுப்பள்ளி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துடன் இணைக்க, 37 கி.மீ., நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் குழாய்களில் துரு, தூசுக்கள் படிந்துள்ளன. இவற்றை சுத்தம் செய்யும் பணி தற்போது நடக்கிறது. இப்பணிகள் முடிந்து, கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பெறப்படும் அதே தூய்மையுடன், அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைப்பது குறித்து ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்ட பின் தான் குடிநீர் வினியோகம் துவங்கும். இப்பணிகள் முடிய இன்னும் ஒரு வாரத்திற்கு மேலாகும் என தெரிகிறது.
இத்திட்டத்தின் மூலம், மணலியிலிருந்து சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு 1.5 கோடி லிட்டர், மாதவரத்திலிருந்து வடசென்னைக்கு மூன்று கோடி லிட்டர் மற்றும் செங்குன்றத்திலிருந்து சென்னை நகருக்கு 5.5 கோடி லிட்டர் குடிநீர், தினமும் சப்ளை செய்யப்பட உள்ளது.