மார்ச் இறுதியில் சென்னைக்கு 'கடல் குடிநீர்' கிடைக்கும்: மு.க.ஸ்டாலின் தகவல்
Wednesday, 24 February 2010 10:42
administrator
நாளிதழ்௧ள் -
நீர் சுத்தி௧ரிப்பு
தினமணி 24.02.2010 மார்ச் இறுதியில் சென்னைக்கு 'கடல் குடிநீர்' கிடைக்கும்: மு.க.ஸ்டாலின் தகவல் ![](http://www.dinamani.com/Images/article/2010/2/23/24mkstalin.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி கிராமத்தில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். காஞ்சிபுரம், பிப். 23: மீஞ்சூரில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தில் வரும் மார்ச் இறுதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டே ஒப்புதல் அளித்தது. ஆனால் அதிமுக அரசு அத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. மீஞ்சூர் குடிநீர் திட்டப் பணிகள் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்றாலும், அதனை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு திட்டத்தை செயல்படுத்த விரைவுப்படுத்தியது. தற்போது அங்கு 95 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. வரும் மார்ச் இறுதியில் மீஞ்சூரில் இருந்து சென்னைக்கு குடிநீர் கிடைக்கும். கடந்த 2008-ல் இத் திட்டம் முடிவடைய வேண்டும். ஆனால் கடல் சீற்றம் மற்றும் தொழில் நுட்ப பிரச்னை போன்றவைகள் தாமதத்துக்கு காரணமாக அமைந்துவிட்டன. அதேபோல் நெம்மேலி கிராமத்தில் மேலும் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலி மற்றும் கிருஷ்ணன் காரணை கிராமத்தில் 40.05 ஏக்கர் பரப்பளவு நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலம் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பாரமரிக்கப்பட்டு வரும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலமாகும். இதை 30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,12,500-க்கு குத்தகைத் தொகையாக சென்னை குடிநீர் வாரியம் எடுத்துக் கொண்டது. இத் திட்டம் அமைக்க மத்திய அரசு ரூ.908.28 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்து அதில் ரூ.871.24 கோடி மானியமாக அளிக்க கடந்த 02-01-2009 அன்று ஆணை வழங்கியது. 2009-10-க்கான மானிய ஒதுக்கீடான ரூ.300 கோடியையும் தமிழக அரசுக்கு மார்ச் 2009-ல் வழங்கியது. நெம்மேலியில் தொடங்கப்பட்ட இத் திட்டம் வரும் 30-11-2011-ல் முடிவடையும் என்றார். நெம்மேலி குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கேளம்பாக்கம், திருவான்மியூர், பள்ளிப்பட்டு மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந் நிகழ்ச்சிக்கு தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நிதித்துறைச் செயலர் கே.ஞானதேசிகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் சிவதாஸ் மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Last Updated on Wednesday, 24 February 2010 10:43
|
சென்னை நகருக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : மாமல்லபுரம் அருகே துணை முதல்வர் அடிக்கல்
Wednesday, 24 February 2010 06:54
administrator
நாளிதழ்௧ள் -
நீர் சுத்தி௧ரிப்பு
தினமலர் 24.02.2010 சென்னை நகருக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : மாமல்லபுரம் அருகே துணை முதல்வர் அடிக்கல்
மாமல்லபுரம் : ""கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்டிருந்தாலும், தி.மு.க., அரசு கிடப்பில் போடாமல் செயல்படுத்துகிறது'' என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னைப் பெருநகர குடிநீர் வாரியம் சார்பில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத் தில் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்திற்கு, நேற்று, அடிக்கல் நாட்டி, துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:சென்னை நகர குடிநீர் திட்டத் திற்காக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக, மத்திய அரசு 2004ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தது. அப்போதைய அ.தி.மு.க., அரசு திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்யவில்லை. 2006ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து, மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியது.
மத்திய அரசு ஆய்வுசெய்து, பொருளாதார விவகார அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து, 871 கோடியே 24 லட்சம் ரூபாய் மானிய மாக வழங்க ஒப்புதல் அளித்தது. முதல்கட்டமாக, 300 கோடி ரூபாய் வழங்கியது. இத்திட்டத்தை செயல் படுத்த, அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை நிலம் நீண்டகால குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.மாதம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் குத்தகைத் தொகையாக வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதிக்குள் திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும்.இத்திட்டத்தால், சென்னை புறநகர் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.அ.தி.மு.க., ஆட்சியில், 2003ம் ஆண்டு, மீஞ்சூரில் துவக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பல்வேறு பிரச்னை, வழக்குகளால் நிலுவையில் இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் வழக்குகளை முடித்து திட்டத்தை தொடங்கினோம். 2008ம் ஆண்டிலேயே முடித்திருக்க வேண்டும்.தொழில்நுட்ப பிரச்சனை, மழை, கடல்சீற்றம் ஆகியவற்றால் முடியவில்லை. தற்போது, 99 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்த மாதத்திற்குள் முழுமையடையும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.தலைமைச் செயலர் ஸ்ரீபதி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Last Updated on Wednesday, 24 February 2010 06:56
கூடலூர் ஆர்.டி.ஓ., உத்தரவு : நீர் சுத்திகரிப்பு தொட்டி சீரமைப்பு
Monday, 22 February 2010 06:20
administrator
நாளிதழ்௧ள் -
நீர் சுத்தி௧ரிப்பு
தினமலர் 22.02.2010 கூடலூர் ஆர்.டி.ஓ., உத்தரவு : நீர் சுத்திகரிப்பு தொட்டி சீரமைப்பு
கூடலூர் : கூடலூர் ஆர்.டி.ஓ., உத்தரவின் படி, மேல் கூடலூர் நீர் சுத்திகரிப்பு தொட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது.மேல் கூடலூர், கே.கே.நகர், குறிஞ்சி நகர், நடு கூடலூர், ஹெல்த்கேம், தோட்டமூலா பகுதி மக்களுக்கு, மேல்கூடலூர் கல்லடி ஆற்றில் சிறு தடுப்பணை அமைத்து, நீர் வினியோகிக்கப்படுகிறது. ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், தடுப்பணைக்கு கீழ் வழிந்தோடும் ஆற்று நீரை ரப்பர் குழாயால் உறிஞ்சி, மேல்கூடலூர், கே.கே. நகர் பகுதிக்கு செல்லும் குழாயில் இணைக்கப்பட்டது.
ஆனால், ரப்பர் குழாய் இணைக்கப்பட்ட பகுதி கழிவு நிறைந்து காணப்பட்டதால், நீரை பருகும் மக்களுக்கு நோய் பரவும் நிலை ஏற்பட்டது; சுகாதாரமான நீரை வழங்க மக்கள் வலியுறுத்தினர். கூடலூர் ஆர்.டி.ஓ., ஹரிகிருஷ்ணன் தலைமையில் வருவாய் துறையினர், கடந்த மாதம் ஆய்வு செய்தனர். சுகாதாரமான நீர் வினியோகிக்கவும், பணிகள் குறித்து அறிக்கை வழங்கவும் கூடலூர் நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ., உத்தரவின் படி, தற்போது, கல்லடி நீர் சுத்திகரிப்பு தொட்டி சீரமைக்கும் பணியை, நகராட்சியினர் மேற்கொண்டுள்ளனர். "பணிகள் முடிந்த உடன், சுகாதாரமான நீர் வினியோகிக்கப்படும்' என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Last Updated on Monday, 22 February 2010 06:21
|
|
|
|
Page 22 of 28 |