தினமலர் 18.05.2010
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பயிற்சி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சுய குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மேம்பாட்டு பயிற்சி கொடுக்கப்படுகிறது. நகராட்சி கமிஷனர் வரதராஜ் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலக திட்ட அலுவலர் ராஜ்குமார் பயிற்சி அளித்தார். முகாம் பற்றி திட்ட அலுவலர் கூறியதாவது: பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி கொடுத்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் 7,200 பேர் உள்ளனர். அவர்களில் 20 பேருக்கு ஒருவரை தேர்வு செய்து பயிற்சி கொடுக்கப்படுகிறது. மொத்தம் 358 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேரை கொண்டு ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் குழுவுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது. வறுமை நிலை குடும்பத்தில் உள்ள பெண்களை தேர்வு செய்து குழுக்கள் அமைப்பது, அவர்களுக்குள் பணத்தை சேமித்து நிதி ஆதாரத்தை உருவாக்குதல், அரசின் திட்டங்களை பயன்படுத்தி நிதி ஆதாரத்தை பெருக்குதல், சுய தொழில் துவங்கி பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளுதல் பற்றி பயிற்சி கொடுக்கப்படுகிறது. இவ்வாறு, திட்ட அலுவலர் கூறினார். சுய உதவிக்குழுக்கள் அமைப்பு, செயல்பாட்டு முறைகள்; குழுக்களின் நன்மை, தீமைகள்; பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள்; சமுதாயத்தில் குழுக்களின் மேம்பாடு என்ற தலைப்புகளில் கருத்துகள் சேகரிக்கப்பட்டன.