தினமணி 19.10.2010
5 கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை
தக்கலை, அக். 18:பத்மநாபபுரம் நகராட்சி மக்கள் குறைதீர் நாளில் 5 கர்ப்பிணிகளுக்குத் தலா ரூ. 6 ஆயிரம் வீதம் உதவித்தொகையை நகர்மன்றத் தலைவர் அ. ரேவன்கில் வழங்கினார். இந்த நகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் முகாம் கடந்த 18-ம்தேதி தொடங்கி ஒவ்வொரு வார்டிலும் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களின் குறைகள் குறித்து அறியவும், நகராட்சி மற்றும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள், சலுகைகள் கிடைக்கவும், முதல் கட்டமாக நகராட்சிக்கு உள்பட்ட 1 மற்றும் 8-வது வார்டில் திங்கள்கிழமை குறைதீர் நாள் நடைபெற்றது.
சாரோடு சி.எஸ்.ஐ. சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாளில் 8-வது வார்டு மக்கள் பொது நல்லி வேண்டுமென கோரினர். 1-வது வார்டு மக்கள் தங்கள் பகுதியிலுள்ள பகுதி நேர ரேஷன் கடையை முழுநேரக் கடையாக மாற்ற வேண்டுமெனக் கோரினர். மேலும் தெருவிளக்கு வசதி வேண்டும். முதியோர், விதவைகள் உள்பட 20 பேர் தங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.
நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் கூறுகையில், மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆணையர் செல்லமுத்து, துணைத் தலைவர் முகமது சலீம், நகர்மன்ற உறுப்பினர்கள், மகப்பேறு உதவியாளர் அன்னகுட்டி, சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் மோகன் மற்றும் மில்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.