தினமலர் 26.03.2010
வரும் ஆண்டில் கர்ப்பிணிக்கு ரூ.1.50 கோடி வழங்க முடிவு
சேலம்: சேலம் மாநகராட்சியில் வரும் 2010-11ம் ஆண்டுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், ஏழை கர்ப்பிணிகளுக்கு முதல் இரண்டு கர்ப்பத்துக்கு மகப்பேறு நிதியுதவியாக பிரசவத்துக்கு முன் மூன்று மாதம், பிரசவத்துக்கு பின் மூன்று மாதம் என மாதத்துக்கு தலா 1,000 ரூபாய் என 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2009-10ல் 4,273 கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு கோடியே 97 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் நிதியாண்டில் 2,500 கர்ப்பிணிகளுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மகப்பேறு நிதி உதவி திட்டமான ஜனனி சுரக்ஷா யோஜன திட்டத்தின் கீழ் மத்திய அரசு மூலமாக முதல் இரண்டு பிரசவத்துக்கு 600 ரூபாய் வீதம் கடந்த ஆண்டு 3,166 பேருக்கு 19 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. நடப்பாண்டில் மூன்றாயிரம் பேருக்கு 18 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.