தினமணி 13.04.2010
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 13 லட்சம் நிதியுதவி
பெ.நா.பாளையம், ஏப். 12: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சார்பில் உலக மகளிர் தினவிழா பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி மன்றத் தலைவர் பத்மாலயா சீனிவாசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.வீரபத்திரன்,அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை மகளிர் திட்ட களப் பணியாளர் ஜெயமணி மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நரசிம்மநாயக்கன்பாளையம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கே.குணசேகரன் பேசியது:
தற்போது மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பொருளாதார ரீதியில் மிகுந்த முன்னேற்றமடைந்து காணப்படுகின்றன. பெற்ற கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துகின்றனர். இது அவர்களுக்கு மேலும் கூடுதல் கடன்களை வழங்க எங்களை ஊக்குவிக்கிறது. இவர்கள் சமுதாய மேம்பாட்டுப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அகல் குழுவுக்கு ரூ. 5 லட்சம், ஓம்சக்தி மற்றும் மகா குழுக்களுக்கு தலா ரூ. 1.20 லட்சம், வெண்புறா குழுவுக்கு ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலைகளை, வங்கி மேலாளர் கே.குணசேகரன், பத்மாலயா சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.
பல்வேறு சுயஉதவிக் குழுக்களுக்கு 60ஆயிரம் மதிப்பில் சுழல் நிதியும் வழங்கப்பட்டது. இதனையடுத்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.