தினமலர் 05.05.2010
சேலம் மாநகராட்சியில் புதிய தொழிற் பயிற்சிகள் சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் 15 நாளில் விண்ணப்பம் விநியோகம்
சேலம்: சேலம் மாநகராட்சியில் சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவசமாக புதிய தொழிற் பயிற்சிகளை பெறுவதற்கான விண்ணப்பம் 15 நாளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.சேலம் மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் 2,500 சுய உதவிக்குழுக்கள் உள்ளது. சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் 1, 400 சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும்12 ல் இருந்து 15 பெண்கள் வரை உறுப்பினர்களாக இருக்கின்றனர்.மகளிர் குழுவில் உறுப்பினராக இருக்கும் பெண்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வங்கிகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி கடன் கிடைக்க வழி வகை செய்கிறது. தவிர, சேலம் மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தொண்டு நிறுவனங்களுக்கு அரசு சுழல் நிதி வழங்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுவினர் ஹோட்டல், டீ கடை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலம் நாள்தோறும் கணிசமான வருவாயை ஈட்டி வருகின்றனர். சேலம் மாநகராட்சி சார்பில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு சேலையில் ஜரிகை பதிப்பது, எம்பிராய்டிங் செய்வது, விளையாட்டு மற்றும் ÷ஷாக்கேஷ் பொம்மைகள் தயாரிப்பது, ஃபேஷன் ஜுவல்லரி வடிவமைப்பு, டைலரிங் உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு 2010-11 ம் ஆண்டு சொர்ண ஜெயந்தி திட்டத்தில், நகர்ப்புற வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் 785 பேருக்கு ரூ.78 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிதாக தொழிற் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பெண்களுக்கு கம்ப்யூட்டர் ஹார்டுவேர்டு யிற்சி, ஃபிரன்ட் ஆஃபிஸ் கோர்ஸ் ஆகியவை கற்றுத்தரப்பட உள்ளது.
தவிர, பியூட்டீஸியன், ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் மெக்கானிசம், பைக் மற்றும் நான்கு சக்கர மொக்கனிக் பயிற்சி, லப் டெக்னீசியன், மொபைல்சர்வீஸ், டிரைவிங், செவிலியர் உதவியார் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி அளிப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது. சேலம் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும், சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுவினர்களிடம், புதிய பயிற்சி அளிக்கப்பட விவரங்கள் குறித்து அதிகாரிகள் தெளிவாக எடுத்து கூறி வருகின்றனர். அவர்கள் மாநகராட்சி பகுதியில் உள்ள பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
சேலம் மாநகராட்சியில் புதிய பயிற்சி பெறுவதற்கு 15 நாளில் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட உள்ளது. பயிற்சியை பெற விருப்பம் உள்ளவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவராக இருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே பயிற்சி பெற முடியும். ஆறு மாதத்தில் இருந்து ஒரு ஆண்டு காலம் வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்டு வந்த பயிற்சியை காட்டிலும் நடப்பாண்டில் முற்றிலும் பல புதிய பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பெண்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.