தினமணி 20.05.2010
நகர்ப்புற ஏழை மக்கள் வீடு கட்ட வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் கடனுதவி
ஈரோடு, மே 19: நகர்ப்புற ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் தர்மேந்திர பிரதாப்யாதவ் தெரிவித்தார்.
÷தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், ஈரோடு வீட்டுவசதிப் பிரிவு சார்பில், நகர்ப்புற ஏழை மக்களுக்கான வீட்டு வசதித் திட்ட செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர்.சுடலைக்கண்ணன் தலைமை வகித்தார்.
÷இதில் வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசியது: தமிழகத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கான, வட்டி தள்ளுபடியுடன் கூடிய வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்பட உள்ளது. இவர்களின் மாத வருவாய் வரம்பு ரூ.5 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கு 5 சத வட்டிச் சலுகையும் வழங்கப்படும்.
÷இது போல குறைந்த வருவாய் பிரிவினர் வீடு கட்டுவதற்கு ரூ.1.60 லட்சம் கடனுதவி வழங்கப்படும். இவர்களின் மாத வருமானம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கும் 5 சத வட்டிச் சலுகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் இதுவரை 35 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 12 ஆயிரம் மனுக்கள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள என்றார்.
÷ஆலோசனைக் கூட்டத்தில் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் எஸ்.விஜயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் சீனிவாசன் மற்றும் ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நகராட்சி ஆணையர்கள், வங்கி மேலாளர்கள், பேரூராட்சி அதிகாரிகள், வீட்டுவசதி வாரியத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.