தினகரன் 21.05.2010
மத்திய அரசு திட்டத்தில் 1 லட்சம் ஏழைகளுக்கு வீடு கட்ட கடன் சலுகை வீட்டுவசதி வாரிய இயக்குனர் தகவல்
ஈரோடு, மே 21: ஈரோட்டில் வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
மத்திய அரசின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில், ஏழை மக்களுக்கு வட்டி சலுகையுடன் கடன் அளிக்கும் திட்டம், கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 27 சதுர மீட்டரில் வீடு கட்ட ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான வரம்பு மாதம் ரூ.5,000. கடனில் 5 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும்.
குறைந்த வருவாய் பிரிவினருக்கு 39.9 சதுர மீட்டரில் வீடு கட்ட ரூ.1.6 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான வரம்பு மாதம் ரூ.5,001ல் இருந்து ரூ.10,000 வரை. இதற்கும் வட்டி சலுகை உண்டு. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மனை பட்டா, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை நகல்கள், வருமான சான்றிதழ், விண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். இதுவரை தமிழகம் முழுவதும் பெறப்பட்ட 35,000 விண்ணப்பங்களில், 12,000 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட வங்கி கடன் பெற்றுத்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறினார்.