தினகரன் 25.05.2010
ஜூன் 6 முதல் பிச்சை எடுக்க தடை மறுவாழ்வு அளிக்க முடிவு
சென்னை, மே 25: நகரில் பிச்சை எடுப்பவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்கப்படுவார்கள். இந்த பணி ஜூன் 6 முதல் தொடங்கும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் பிச்சை எடுப்பவர்களை தடுப்பது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளுடன் மேயர் மா.சுப்பிரமணியின் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி மூலம் சாலைகளில் சுற்றி திரியும் மனநோயாளிகள் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தொலைபேசி அழைப்புகள் மூலம் 451 நபர்கள் இருப்பதாக கூறப்பட்டது. இவர்களில் 179 பேர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையிலும், 105 பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். 11 பேர் முதியோர் இல்லத்திலும், 31 பேர் தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும், 5 பேர் அரசு மருத்துவமனையிலும் ஒப்படைக்கப்பட்டனர்.
போக்குவரத்து சிக்னலிலும் நகரின் பல பகுதிகளி லும் பிச்சை எடுப்பவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க 18 தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
பிச்சை எடுப்பவர்கள் ஜூன் 6ம் தேதி முதல் தொண்டு நிறுவனங்கள் மற்றும் போலீசார் உதவியுடன் மீட்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்கப்படுவார்கள். ஒரு வாரத்திற்குள் அனைவரும் மீட்கப்பட்டு சென்னையில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும். இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, துணை ஆணையர் ஜோதி நிர்மலா உடனிருந்தனர்.