தினகரன் 07.06.2010
சிக்னலில் பிச்சை எடுக்க இன்று முதல் தடை
சென்னை, ஜுன் 7: சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சென்னை மாநகராட்சியால் மீட்கப்பட்டு, மறுவாழ்வு மையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகரில் போக்குவரத்து சிக்னலில் பிச்சை எடுப்பவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
சென்னையில் உள்ள 155 வார்டுகளிலும் போக்குவரத்து சிக்னல்களில் மாநகராட்சி அதிகாரிகள் 7ம் தேதி (இன்று) காலை முதல் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பிச்சை எடுப்பவர்களை போலீசார் உதவியு டன் பிடிப்பார்கள். மீட்கப்படும் பிச்சைக்காரர்கள், புதிய ஆடைகள் அணிவித்து மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவார்கள். அவர்களை பற்றிய தகவல்களை சேகரித்த பிறகு 5 நாட்களுக்குள் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க 18 தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஒருவாரத்துக்குள் அனைவரும் மீட்கப்பட்டு சென்னையில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும்.