தினமணி 28.04.2010
ஏழை மக்கள் வீடு கட்ட வட்டிச் சலுகையுடன் கடன் உதவி
திருவள்ளூர், ஆக. 24: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற ஏழை மக்களுக்கு வட்டிச் சலுகையுடன் கூடிய வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சொந்த மனை உள்ள ஏழைகள் வீடு கட்ட வீட்டுவசதி வாரியம் கடன் உதவி வழங்குகின்றது.
நலிவுற்ற பிரிவினருக்கு கடனுதவி: இத்திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு வீடு கட்ட கடன் உதவி பெற மாத வருமானம் ரூ.5 ஆயிரத்துக்குள் இருத்தல் வேண்டும். ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும் கடன் உதவியில் 5 விழுக்காடு சலுகை வழங்கப்படும்.
÷கடன் தொகை பெற அரசு வழங்கிய இலவச பட்டா, பட்டா நிலம் விண்ணப்பதாரரின் பெயரிலேயே இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 25 சதுர மீட்டரில் வீடு கட்ட வேண்டும். வீட்டு மனை நகராட்சிப் பகுதிக்கு உட்பட்டோ, பேருராட்சிக்கு உட்பட்டதாகவோ இருக்க வேண்டும்.
குறைந்த வருவாய் பிரிவினருக்கு கடன் உதவி: குறைந்த வருவாய் பிரிவினருக்கு மாத வருமானம் ரூ.5001 முதல் ரூ.10 ஆயிரம் வரையில் இருத்தல் வேண்டும். இதில் ரூ.1.60 லட்சம் கடன் வழங்கப்படும். இத் தொகையில் 1 லட்சம் வரை வட்டியில் 5 விழுக்காடு வட்டிச் சலுகை வழங்கப்படும்.
÷40 சதுர மீட்டருக்கு குறையாமல் வீடு கட்ட வேண்டும். வீட்டு மனை நகராட்சிப் பகுதிக்கு உட்பட்டோ, பேருராட்சிக்கு உட்பட்டதாகவோ இருக்க வேண்டும். வீடுகள் கட்ட அந்தந்தப் பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கடன் பெற்றுத் தர தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தேவையான ஆவணங்கள்: வீட்டு மனைப் பட்டா, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வருமானச் சான்றிதழ், விண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி சிறப்பு திட்டக் கோட்டம் 1: தொலை பேசி எண் 23715560, 9940498968: சிறப்பு திட்டக் கோட்டம் 2: 24747557, 9677033277. கலைஞர் கருணாநிதி நகர் கோட்டம்: 23713177, 9940498953 ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.