தினமணி 07.01.2010
மானிய வட்டியில் வீடு கட்ட கடனுதவி
கரூர், ஜன.6: வீடு கட்டுவதற்கு மானிய வட்டியில் கடன் உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானிய வட்டியில் வீடு கட்ட கடன் உதவித் திட்டத்தில் வீடு கட்டவோ அல்லது வீடு வாங்கவோ கரூர் மாவட்டத்தில் வசிக்கும் ஏழை மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில், நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மாத வருமானம் ரூ. 3,300 வரை பெறும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரும், மாத வருமானம் ரூ. 3,301 முதல் ரூ. 7,300 வரை பெறும் நடுத்தர வருமான பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூ. 1 லட்சமும், நடுத்தர வருமான பிரிவினருக்கு ரூ. 1.50 லட்சமும் கடனாக வழங்கப்படும். இக்கடன் தொகை 15 முதல் 20 ஆண்டு கால இடைவெளியில் திரும்பச் செலுத்தப்பட வேண்டியதாகும்.
மேற்காணும் கடன் தொகை தேசிய வங்கிகளின் மூலம் பெற்றுத்தரப்படும். கடன் தொகைக்கு வட்டியில் 5 சதம் மானியம் வழங்கப்படும். கூடுதலாக கடன் தொகை தேவைப்படுபவர்களுக்கு கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 25 ச.மீ பரப்பளவும், நடுத்தர வருமானப் பிரிவினர்களுக்கான வீடுகள் குறைந்தபட்சம் 40 ச.மீ பரப்பளவும் இருக்க வேண்டும்.
தம்முடைய பெயரிலோ, மனைவி பெயரிலோ சொந்தமாக வீடு இல்லாதவர்கள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள், அதற்குரிய பட்டா உரிமையைப் பெற்றிருக்க வேண்டும். அரசின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுள்ளவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி காஜாமலை காலனியிலுள்ள திருச்சிராப்பள்ளி வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரையோ அல்லது கரூர் வீட்டு வசதி திட்ட பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரிய பராமரிப்பு அலுவலகத்தையோ நேரில் அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.