தினமணி 13.04.2010
ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டம்: ரூ. 32 ஆயிரம் கூடுதலாக ஒதுக்க உத்தரவு
கோவை, ஏப். 12: ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ. 32 ஆயிரம் கூடுதலாக ஒதுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
÷கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ், 48 பயனாளிகளுக்கு தலா ரூ. 28 ஆயிரத்து 350}க்கான காசோலையை துணை மேயர் நா.கார்த்திக் வழங்கினார்.
÷நிகழ்ச்சிக்கு கிழக்கு மண்டல தலைவர் எஸ்.எம்.சாமி தலைமை வகித்தார். மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வெ.ந.உதயக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்குப் பின் துணை மேயர் கார்த்திக் கூறியது:
÷ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம், கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
÷பட்டா வைத்திருக்கும் பயனாளிகளுக்கு அதே இடத்திலும் தனி வீடு கட்டித் தரப்படும். நீர்நிலை புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு அம்மன்குளம், உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்படும்.
÷இதற்காக ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ. ஒரு லட்சத்து 12 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. வீடு கட்ட இத்தொகை போதுமானதாக இல்லை என்பதால், கூடுதலாக ரூ. 32 ஆயிரம் ஒதுக்க கடந்த மாதம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது, என்றார்.