Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

சொத்துகள் வாங்கும் ஏழைகளுக்கு சலுகை: ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சொத்துகளுக்கு முத்திரைத் தீர்வை-பதிவுக் கட்டணம் விலக்கு

Print PDF

தினமணி     12.05.2010

சொத்துகள் வாங்கும் ஏழைகளுக்கு சலுகை: ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சொத்துகளுக்கு முத்திரைத் தீர்வை-பதிவுக் கட்டணம் விலக்கு

சென்னை, மே 11: ஏழைகளும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களும் ரூ.5 ஆயிரம் வரையிலான சொத்துகளை வாங்கினால் அதற்கான ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அந்தத் துறையின் அமைச்சர் சுரேஷ் ராஜன் (படம்) பதிலளித்து வெளியிட்ட அறிவிப்புகள்:

ஏழை மக்களும் சொந்தமாக சொத்துகள் வாங்குவதை ஊக்குவிக்க ரூ. 3 ஆயிரம் வரை மதிப்புள்ள சொத்துகளுக்கான ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இனி, சொத்துகளின் மதிப்பானது ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இந்தத் தொகை வரையிலான மதிப்புள்ள சொத்துகளுக்கு பதிவு மற்றும் முத்திரைத் தீர்வையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

களப்பணியில் விலக்கு: ஆவணங்களில் சொத்து மாற்றம் செய்யப்படும்போது கட்டடமும் மாற்றப்பட்டால் அதற்கான முத்திரைத் தீர்வையும், பதிவுக் கட்டணமும் செலுத்தப்பட வேண்டும். கட்டடங்கள் மதிப்பிட பதிவு அலுவலர்கள் களப்பணி மேற்கொண்டு மதிப்பீடு செய்கின்றனர். பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் கட்டட மதிப்பு ரூ.50 ஆயிரம் வரையிலான கட்டடங்களுக்கு இப்போது களப்பணி செய்யாமலேயே பொது மக்களுக்கு ஆவணம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வரம்பு 2003-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு, சுமார் ஏழாண்டுகள் ஆகின்றன. இப்போது கட்டடங்களின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் கிராமப்புறங்களில் ரூ. 1 லட்சம் வரை மதிப்புள்ள கட்டடங்களுக்கும், நகர்ப்புறங்களில் ரூ. 2 லட்சம் வரை மதிப்புள்ள கட்டடங்களுக்கும் களப்பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

மேலும், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் மற்றும் மதிப்பீடு இணைத்து தாக்கலாகும் ஆவணங்களுக்கும் கட்டட களப்பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதனால், ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு திரும்ப வழங்கப்படும்.

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தரச்சான்று:

சார்பதிவாளர் அலுவலகங்களின் மதிப்பை பொது மக்கள் மத்தியில் உயர்த்திடும் வகையில் 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.. 9001:2008 தரச்சான்று பெறப்படும் என்றார் அமைச்சர் சுரேஷ் ராஜன்.

Last Updated on Wednesday, 12 May 2010 11:28
 

ஏழை மாணவர்களுக்கு இலவச கணினி செல்போன் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

Print PDF

தினமணி 06.05.2010

ஏழை மாணவர்களுக்கு இலவச கணினி செல்போன் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

குடியாத்தம், மே. 5: குடியாத்தம் நகராட்சி சார்பில், மத்திய அரசின் ஸ்வர்ண ஜெயந்தி திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய 6 மாத பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.

நகராட்சி நிர்வாகமும், சிஎஸ்ஐ கணிப்பொறி நிறுவனமும் இணைந்து இப்பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.

நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் எஸ். ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கணிப்பொறி நிறுவன இயக்குநர் வி.ஜே. ஞானேஸ்வரன் வரவேற்றார்.

நகர்மன்றத் தலைவர் எம். பாஸ்கர் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகளை வழங்கினார். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 300 உதவித்தொகை வழங்கப்படும்.

 

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோர் குறித்து 30 நாளில் அறிக்கை-சரத் பவார்

Print PDF

தினமணி 21.04.2010

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோர் குறித்து 30 நாளில் அறிக்கை-சரத் பவார்

புது தில்லி, ஏப்.20: நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை குறித்த புதிய அறிக்கையை மத்திய திட்டக் குழு இன்னும் ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்யும் என்றார் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய துணை கேள்விக்கு ஒன்றுக்கு பதில் அளித்து பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் அதிகாரம் மத்திய திட்டக் குழுவுக்கு மட்டுமே உண்டு. அந்தவிதத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறித்த புதிய அறிக்கை தாக்கல் செய்யும் பணியில் அது ஈடுபட்டுள்ளது. 30 நாளில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

திட்டக் குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில்தான் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் உணவுதானிய பற்றாக்குறை நிலவுவதாகப் புகார் எழுந்துள்ளதே என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த சரத் பவார், அனைத்து மாநிலங்களுக்குமே பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் போதுமான உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் மாநில அரசுகள்தான் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் உணவுதானியத்தைவிட குறைவாக எடுத்துக் கொள்கின்றன. இதனால் உணவுதானிய பற்றாக்குறைக்கு மத்திய அரசு பொறுப்பல்ல; மாநில அரசுகளே காரணம் என்றார்.

பிகாரிலும் ரேஷன் கடைகளில் உணவுதானியப் பற்றாக்குறை நிலவுகிறது என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டினார்.இதற்கு பதில் அளித்த சரத் பவார், பிகாரையும் மத்திய அரசு புறக்கணிக்கவில்லை. அந்த மாநிலத்துக்கும் போதுமான உணவுதானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பிகாரும் பிற மாநிலங்களைப் போல தங்களுக்கு ஒதுக்கீடு செய்த உணவுதானியத்தை முழுவதும் எடுத்துக் கொள்ளவில்லை. 2009-10-ல் பிகாருக்கு 34.56 லட்சம் டன் உணவுதானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 20.51 லட்சம் டன் உணவு தானியத்தை மட்டுமே பிகார் எடுத்துக்கொண்டது என்றார்.

 


Page 26 of 34