தினமலர் 14.05.2010
கரூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.கரூர் பஸ் ஸ்டாண்டில் நகராட்சியால் வாடகைக்கு விடப்பட்ட கடைகளுக்கு வெளிப்பகுதியில் மேலும் பல கடைகள் முளைத்திருந்தன. இது மட்டுமின்றி பயணிகள் நடைபாதையையும் வியாபாரிகள் ஆக்கிரமித்து வடை, மேஜை, டீ மேஜை வைத்திருந்தனர்.
இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.இந்த நிலையில் நேற்று நகராட்சி ஆணையர் உமாபதி தலைமையில் பொறியாளர் ராஜா, நகர் நலஅலுவலர் டாக்டர் சந்தோஷ்குமார், நகரமைப்பு அதிகாரி ஜானகிராமன் மற்றும் அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு இடையூராக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சில கடைகளுக்கு அருகே இருந்த நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்பு, கடைகளின் முன்புறம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடைகளுக்கு முன்பு போடப்பட்டிருந்த அலங்கார விளக்குகளை அப்புறப்படுத்தினர். நகராட்சி சார்பில் போடப்பட்டிருந்த அனைத்து டியூப்லைட்டுகளும் எரிந்திட வேண்டும் என்று ஆணையர் நகராட்சி மின்பிரிவு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.