தினமலர் 14.05.2010
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட ரோடுகளில் அனைத்து ஆக்ரமிப்புகளும் அகற்றப்படும் நகராட்சி ஆணையாளர் தகவல்
கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட ரோடுகள் மற்றும் தெருக்களில் இருக்கும் தற்காலிக ஆக்ரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கோவில்பட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட நகராட்சி ரோடுகள் மற்றும் தெருக்களிலுள்ள அனுமதியின்றி தற்காலிக ஆக்ரமிப்புகள் அனைத்தும் 1920ம் வருட தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் பிரிவு 182ன் கீழ் ஒவ்வொரு வாரமும் புதன் அல்லது வியாழக்கிழமைகளில் நகராட்சியால் போலீஸ் பந்தோபஸ்துடன் அகற்றப்படவுள்ளது. ஆகையால் ஆக்ரமிப்பு செய்துள்ளவர்கள் தங்களது ஆக்ரமிப்புகளை தாங்களே முன்வந்து அப்புறப்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
தவறும்பட்சத்தில் நகராட்சியால் ஆக்ரமிப்புகள் அகற்றப்படுவதோடு, அகற்றப்பட்ட பொருட்கள் கண்டிப்பாக ஆக்ரமிப்புதாரர்களிடம் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்படுகிறது. மேலும் நகராட்சி பகுதிகளில் கட்டடம் கட்டுவோர் ரோடுகளில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் கட்டுமான பொருட்களை மற்றும் கட்டட இடிபாடுகளை குவித்துத் கொண்டு 24 மணிநேரத்திற்குள் அவற்றை கட்டடத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறின்றி ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக குவிக்கப்பட்டு அதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதும்பட்சத்தில் 1920ம் வருட தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பிரிவு 188ன் கீழ் நகராட்சி பணியாளர்களை கொண்டு அகற்றப்பட்டு நகராட்சிக்கு கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்படுவதாக கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.