தினமலர் 18.05.2010
ஐந்தருவியில் ஆக்ரமிப்பு அகற்றம்
தென்காசி : ஐந்தருவியில் ஆக்ரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் அகற்றப்பட்டது.
குற்றாலம், ஐந்தருவியில் சீசன் காலங்களில் தற்காலிக கடைகள் ஏலம் விடப்படுவது வழக்கம். ஏலம் எடுத்த காலம் முடிந்த பிறகும் சிலர் டவுன் பஞ்.,இடத்தை ஆக்ரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்ரமிப்பு பகுதியில் கடைகள் இருப்பதாக புகார்கள் சென்றன.
ஐந்தருவி கார்பார்க்கிங் பகுதி மற்றும் அருவிக்கு செல்லும் பகுதியில் ஆக்ரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணியில் குற்றாலம் டவுன் பஞ்.,ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணியை தென்காசி ஆர்.டி.ஓ.மூர்த்தி, டி.எஸ்.பி.ஸ்டாலின், குற்றாலம் டவுன் பஞ்.,நிர்வாக அதிகாரி ராசையா பார்வையிட்டனர். இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.